அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
இன்னிய மாலை
எழுதியவர்: சிவலிங்கம் சிவபாலன்
Sunday, 16 April 2006
பிரான்ஸ் சிலம்பு அமைப்பினர் ஏற்பாடு செய்த 'இன்னியமாலை' பார்வையாளர்களை ஈர்த்த மாலையாக அமைந்தது. 09-04-2006 ஞாயிறு அன்று பாரிசில் இரண்டு பிரிவுகளை கொண்டதான இம்மாலை இரு பிரதான நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது. ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும்.
எம்மவர் நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பிப்பது வழமை. அதுபோலவேதான் அன்றும் அகவணக்கம் மக்கள விளக்கேற்றல் என்ற ஆரம்ப விழிமியங்களுடன் ஆரம்பித்தது.
மேற்படி இன்னிய மாலை நிகழ்வினை சிலம்பு அமைப்பின் செயலாளர் திரு க.முகுந்தன் அவர்களும் துணைச் செயலாளர் செல்வன் பிரசாந்தும் இணைந்து தமிழிலும் பிரெஞ்சிலும் தொகுத்து வழங்கினர். சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நகரசபை உறுப்பினரும் தமிழ் சமூக ஆர்வலருமான திரு.அலன் ஆனந்தன் கண்காட்சியை திறந்து வைத்து இன்னிய மாலைக்குள் அழைத்துச் சென்றார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளைஞனான அன்ரனின் தனித்த உழைப்பினால் சேகரிப்பட்டவற்றை காண்கையில் மெய் சிலிர்க்கினறது. இவற்றின் பெறுமதி கணக்கிட முடியாதவை. ஈழத்தமிழர்கள் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்றாக இருக்கின்றது எனப் புகழ்ந்துரைந்தார்.
கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அன்ரன் பதிலிறுத்தார். கண்காட்சியில் பண்டைய நாணயங்கள், தாள் காசுகள் என்பனவும் தபால் முத்திரைகள், முதல்நாள் உறைகள் என்பனவும் பத்திரிகைகள் சஞ்சிகைள் மற்றும் கருத்துச் சித்திரங்கள் என்பற்றின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதன்பின் அப்பால் தமிழ் இணைத்தளத்தின் நெறியாளர் கி.பி.அரவிந்தன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பவற்றில் அரிய நாணயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது எடுத்துரைப்பில் யாழ்பாண அரசு காலத்திய நாணயங்கள் இருப்பதையும் ஒல்லாந்து கால நாணயங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியதுடன் ஐந்து சதம், பத்து சதம் என்பவை நாணயங்களாக இல்லாது தாள்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அன்ரன் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்து அன்ரனை உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார்.
அன்ரன் தனது உரையில் தான் பொழுதுபோக்காக தொடங்கிய இந்த சேகரிப்பு இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாக கூறினார். அத்துடன் தனது பெற்றோர் சகோதரர்கள் துணைவியார் தந்த ஒத்துழைப்பும் ஆதரவுமே தொடர்ந்து இதில் ஈடுபட வழிவகுத்தது என்றும் அவ்வகையில் அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சேகரிப்புகள் தனக்குப்பின் யாழ்பாண நுலகத்திற்கு வழங்க விரும்புவதாகவும் உணர்ச்சி வசப்பட கூறினார்.
அடுத்த நிகழ்வாக சஞ்சீவ்காந்தின் உராய்வு கவிதை நூல் அறிமுகம் இடம்பெற்றது. இதனை கவிஞரும் ஈழமுரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாணி.நாகேஷ் அறிமுகம் செய்துவைத்தார். அவர் தனது அறிமுக உரையில் 12வயதில் சிறுவனாக யேர்மனிக்கு வந்தடைந்த சஞ்சீவ்காந்த் அந்நியமொழிக் கல்விச் சூழலிலும் தமிழில் கவிதை எழுத முனைந்தனை பாராட்டினார். இந்த தலைமுறையினர் தமிழில் எழுதுவதையும் சிந்திப்பதையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டியது கடமை என்றும் சுட்டிக்காட்டினார். வளரும் இளந்தலைமுறையினர்க்கு இவரொரு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றும் புகழ்ந்துரைத்தார். சஞ்சீவ்காந் தனது ஏற்புரையில் கவிதை பற்றிய விமர்சனங்களை தயங்காது முன்வைக்கும்படியும் அதுவே தன்போன்றோர் வளர உதவும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உராய்வு கவிதை நூலை பார்வையாளர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றதுடன் கவிஞரான அந்த இளைஞனின் கையெழுத்தை நூலில் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர்.
எமது பண்டைய கலையான நாட்டுக்கூத்தின் ஒருபகுதியான வரவேற்புக்கூத்து ஒன்று ஆனந்தன் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. அதன்பின் எம்மிடையே புரையோடிப்போன சாதியம் வெளிப்படும் முறையையினை அம்பலப்படுத்தும் எம்.அரியநாயகத்தின் 'விளம்பரம்' என்ற ஓரங்க நாடகம் கலைஞர்கள் இரா.குணபாலன் மற்றும் லீனா ஆகியோரின் நடிப்பில் மேடையேறியது. திருவாளர்கள் ஒகஸ்ரின், பீ்ற்றர் ஆகியோரின் பாட்டும் பாவமும் என்ற நிகழ்வும் நடாத்தப்பட்டது.
இரண்டாவது அரங்கான திரையிடலில் இன்னிய அணி பற்றியதான விவரணமும், கிச்சான், பேரன்பேர்த்தி ஆகிய குறும்படங்களும் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்புரையாற்ற இருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பீடாதிபதி பாலசுகுமார் இலங்கையில் இருந்து வந்து சேராமையால் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சிறப்புரை இடம்பெறாது என்பதற்கான வருத்தத்தினை க.முகுந்தன் சபைக்கு தெரிவித்தார்.