அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 03 May 2024

arrowமுகப்பு arrow சமூகம் arrow உள்ளொளி arrow நேரான எண்ணங்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நேரான எண்ணங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கந்தையா நவரேந்திரன்  
Friday, 14 October 2005

மனிதன் ஆண்டாண்டு காலமாகக் கடவுளைக் கண்டுபிடிப்பதிலும் கடவுளோடு வாழ்வதிலுமே இருக்கின்றான். அவற்றிற்காக அவன் செலவழிக்கும் காலமும் பணமும் மிக அதிகம். அவன் தனது மனத்தாலோ, கைகளாலோ, கற்பனைகளாலோ, எண்ணத்தின் அசைவுகளாலோ கடவுளைப்பற்றிய விம்பங்களையும் முடிவுகளையும் உருவாக்குவதிலேயே சலிப்பின்றி ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றான். அவனது தேடல் சார்ந்த இச்செயற்பாடுகள் பற்றிச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு, நாம் முதலில் உயிர்த்தோற்றம் - பொருளின் மூல இயல்பு - புறஇயல் மெய்மை  (reality)  பற்றியும், உண்மை (truth)  பற்றியும் புரிந்துகொள்ளவேண்டியது  அவசியம். அவற்றைப்பற்றிப் புரிந்துகொண்டால் தான் அவை இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பைப்பற்றி  எம்மால் சரிவரப் புரிந்துகொள்ளமுடியும்.
புறஇயல் மெய்மை என்ற சொல்லை ஆங்கிலத்தில்  'reality'  என்பர்.   'Reality' என்றசொல் 'res' என்ற லத்தீன் வேர்ச் சொல்லில் இருந்து  வந்தது. லத்தீனில் 'res' என்றால் 'பொருள்' என்று அர்த்தம். எண்ணமானது எதனை இலக்காகக் கொண்டு  செயற்படுகின்றதோ, புனைகின்றதோ, பழைய நினைவுகளில் ஆழவைக்கின்றதோ, அதனைப் புலன்களால் அறியப்படுகின்ற உளதாம் பொருள் - புறஇயல் மெய்மை  (realite) எனக் கூறலாமா? அல்லது அவை அனைத்தும் எண்ணத்தின் எறிவுகளா? வீச்சுக்களா? உமிழ்வுகளா? பிதுக்கங்களா?  நீட்சிகளா? இவ்விசாரணைகள் அனைத்தையும் நாம் எம்முள் நிகழ்திப் பார்ப்போம். பிறருடைய கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், கோட்பாடுகளையும் சற்றே  புறந்தள்ளிவிட்டு, நாமே  எமக்காக எம்முள் நிகழ்த்தவிருக்கும் ஆழமான அவதானிப்பின் மூலம் தெளிவு பெற நிதானமாக முனைவோம்.
எண்ணமானது செயற்படாவிட்டால் உளதாம் பொருளாகிய  'reality' என்று ஒன்று இருக்குமா? எண்ணம் (thought) , உள்ளதாம் பொருள்  (reality), உண்மை (truth) ஆகியன பற்றித் தத்துவஞானியர் பலர் தத்தமது அறிவுக்கு எட்டியபடி வியாக்கியனங்களையும் முன்மொழிவுகளையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தமது இருப்புக்காக அவர்கள் அப்படிச் செயற்படவேண்டியிருக்கின்றது போலும். அவர்களால் எமது அகப்பார்வையை நாம் கெடுத்துவிடாமல் எமது சுயவிசாரணையை மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் தொடருவோம். எமது பார்வையில் எவ்வழியிலும் குருட்டுத்தன்மை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே எம்மை நாமே  அவ்வப்போது எச்சரித்துக்கொண்டிருக்குவேண்டியுள்ளது. புறஇயல் மெய்மை - உளதாம் பொருள் எண்ணமானால், எண்ணமும் சிந்திக்கும் ஒரு பொருள்தான். அப்படியானால் எண்ணமும் உணர்வுநிலையில்; (consciousness)  தோன்றும் ஒரு பொருள்தானே? அது அதாவது அவ்வெண்ணம் உணர்நிலைக்கு அப்பாலும் சொல்லக்கூடியதா? உணர்வுநிலையின் உள்ளடக்கம் புறஇயல் மெய்மையா? உணர்நிலைக்கு இணைமாறாக எண்ணத்தை நாம் உபயோகிக்கலாமா?
எண்ணமிருக்கும்போது எம்முள் உணர்நிலை இருக்கும். உணர்நிலையில் நாம் உணரும் பொருளிலிருக்கும். இயற்கையும், முழுப்பூமியும், நட்சத்திரங்களும், பிரபஞ்சமும், ஏன், எமது மனத்துயரமும் கூட, புலன்களால் அறியப்படுகின்ற புறஇயல் மெய்மைகளே மாயை நிலையிலிருக்கும் மனிதன் ஒருவனுக்கு, அவனது மாயை கூட , அவனைப் பொறுத்தமட்டில் புறஇயல் மெய்மை (reality) தான் , அவனுடைய மூளை, ஒரு மின் - இரசாயண அசைவு நிலையிலிருக்கும் போது, அவன் தனது மாயைக்குள், புலன்களால் அறியப்படுகின்ற வழியிலேயே பயணிக்கின்றான் - செயற்படுகின்றான். புத்தரையும், யேசுவையும், கிருஷ்ணனையும், முகமதுவையும் நம்புகின்றவர்களின் மனங்களில் அவர்கள் அனைவருமே பொருண்மை சார்ந்த உயிர்த்தோற்றங்களேயாகும். எனவே எண்ணத்தால் சிந்திக்கப்படும் எதுவும், அது நியாயமானதாகவோ நியாயமற்றதாகவோ இருந்தாலும்கூட , சிந்திப்பவனைப் பொறுத்தமட்டில் உயிர்த்தோற்றம் உடையதேயாகும். அவனுடைய எண்ணம் தவறானவழியில் திரிவுபடடிருந்தாலும் அல்லது சரியான வாழியில் தெளிவாக நியாயப்படுத்தப் பட்டிருந்தாலும்கூட அது புற இயல் மெய்மையாகிய சநயடவைல யேயாகும். இந்தநிலையில், நாம் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். அதாவது அந்தப்புறஇயல் மெய்மைக்கும் (reality), உண்மைக்கும் (truth) எவ்வித தொடர்பும் கிடையாது.
பொருள் (thing)  என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல்லும் 'fedingen' என்ற ஜெமனியச் சொல்லின் வேர்ச்சொல்லும் அடிப்படையில் ஒன்றேயாகும். அந்த வேர்ச் சொல்லின் கருத்து வரையறை (condition)  என்பதாகும.; எனவே ஒரு பொருளானது அடிப்படையில், தவிர்க்க முடியாதபடி, கட்டாயமாக வரையறையை கொண்டதாகவே இருக்கும். அப்படியில்லாவிட்டால், அது குறிப்பிட்ட பொருளாய் இராது. உதாரணமாக நாம் ஒரு கதிரையைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொண்டால், அக் கதிரை, 'கதிரை' என்ற வரையறைக்கு உட்பட்டிருக்கும். இயற்பியலில் (physics) இது தெளிவாக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் (planets) யாவும் ஒன்றோடு  ஒன்று இயக்க விளைவு கொண்டுள்ளன. அதுபோலவே அணுக்களும் ஒன்றோடு ஒன்று இயக்க விளைவுக்கு - செல்வாக்குக்கு (influence) உட்பட்டவை. எண்ணமும் உணர்நிலையும் ஒன்றோடு ஒன்று செல்வாக்குக்கு உட்பட்டவையே. உணர்வு நிலை எதுவும் இயக்க விளைவுக்கு - செல்வாக்குக்கு உட்பட்டே இருக்கும். அந்த இயக்க விளைவே - செல்வாக்கே பொருட்களுக்கு  வடிவங்கொடுக்கிறது. உருப்பொருட்களை உருவாக்கும் எண்ணமானது புறஇயல் மெய்மையானதால், உயிர்த் தோற்றத்தின் ஒரு பகுதியை இன்னொரு பகுதி இயக்க விளைவுக்கு உட்படுத்தும். அதைப்போலவே, பொய்த்தோற்றத்தின்  (illusion) ஒரு பகுதி, அதே பொய்த்தோற்றத்தின் இன்னொரு பகுதியின் மீது செல்வாக்கை ஏற்படுத்தும். நாம் காணும் பிரபஞ்சம் எங்களது சொந்த அனுபவத்தின் செல்வாக்கால் ஏற்படுத்தப்படுவதனால், அந்தப் பிரபஞ்சமும் எங்களால் வரையறுக்கப்படுகின்றது. எங்களது சொந்த அனுபவத்தினூடாகவோ, பின்னணியினூடாகவோ நோக்கப்படும் எதுவுமே எங்களுடைய எண்ணத்தின் செல்வாக்கால் - இயக்கவிளைவினால் வரையறுக்கப்படுகின்றது. எனவே புறஇயல் மெய்மை (reality) என்பது மனிதனிலிருந்து பூரணமாக விடுபட்டதாகவோ, தற்சார்பானதாகவோ இருக்கமுடியாது.
என்றும் உள்ளது எதுவோ அதுவே 'உண்மை'. இந்த உண்மை காலத்தை கடந்து - காலத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகிய மனத்தை கடந்து எமது அகத்திற்குள் உறைவானதாலேயே அதனை, 'கடந்து உள்' என்ற பொருட்பட 'கடவுள்' என்று அழைக்கின்றனர்.
'உண்மையான' என்ற பெயரடைச் சொல்லை ஆங்கிலத்தில் 'true' என்று சொல்லுகின்றோம். இதனை லத்தீன் மொழியில் 'verus' என்று சொல்லுகின்றோம். 'Verus' என்ற லத்தீன் 'என்றும் உள்ள அது'  (that which is) என்ற பொருளுடையது.
'உண்மையான' என்ற சொல்லின்; மூலக்கருத்து 'நேர்மையான' - 'உண்மையான' என்பதாகும். எங்கள் எண்ணமோ உணர்வு நிலையோ நேராக இயங்கினால், அது என்றும் எமது உள்ளத்திற்கு  உண்மையாக - நேர்மையாக இருக்கும். மனிதன் அறிவமைதியுள்ளவனாக - மன ஆரோக்கியமுள்ளவனாக இருப்பானேயானால், அவனுடைய எண்ணமும் உணர்வுநிலையும் என்றும் உள்ளத்தின் உண்மையாக இருக்கும். ஒருவனுடைய உணர்வு நிலையானது - மனத்தின் விழிப்பு நிலையானது (consciousness), பொய்ம்மையையும், போலித்தன்மையையும், முறைதவறிய பிழையான தகவல்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்டிருக்குமானால் அவனுடைய உணர்வுநிலையும் புறஇயல் மெய்மைபோல் வளைந்ததாக - கபடமானதாக - நெறிபிறள்வுடையதாக முறுகித் திருகியதாகவே இருக்கும். அறிவே மனிதனுடைய உணர்வு நிலையின் உள்ளடக்கம். ஒருவனுடைய  புறஇயல் மெய்ம்மை திரிபுற்றிருப்பதினால் அவனுடைய அறிவின் அமைப்பும் பொய்யானதாகவே இருக்கும்.
திரிபுறாத அறிவைவிடாது வைத்துக்கொண்டு எமது உணர்வு நிலையை வெறுமையாக்குவது எப்படி? இந்த நிலையே எமக்கு மிகவும் தேவையானது. இந்நிலையே புறஇயல் மெய்மையைப் புரிந்து கொள்வதற்று தேவையானது. ஆழமான ஆற்றலுடன் தொடர்பு ஏற்படுத்தவல்ல கருவிலேயே எங்களது முழு உணர்வு நிலையையும் குவித்துவைத்துள்ளோம்.  இதனையே பக்தியென்றும் புனிதமென்றும் கொண்டாடுகின்றோம். எங்களது உணர்வு நிலை எங்களது ஆழமான ஆற்றலுடன் இப்படி தொடர்புற்றிருக்கும்வரை அது பிழையான செயற்பாட்டிற்கான நிலையையே பேணிக்கொண்டு இருக்கும். நாம் உணர்வு நிலையைத் துண்டிக்கும்போது, அது தனது ஆற்றலை இழந்து போகும். உடனே உணர்வு நிலையிலிருந்த 'எனது' 'நான்' என்ற வரையறை தானாகவே தனது ஆற்றலைப் பிறப்பிக்க முனையும். இதிலிருந்தே உணர்வு நிலையின் உள்ளடக்கமே 'நான்' என்ற வரையறைதான் என்பது தெளிவாகின்றது, நாம் முன்பு கூறியதுபோன்று இந்த உள்ளடக்கமே தனது சொந்த ஆற்றலைப் பிறப்பிக்கிறது. நான் என்னுடன் முரண்படும் போது அந்த முரண்பாடே எனக்கு வலுவைத்தருகிறது.  நான் எதிரெதிரான அவர்களைக் கொண்டிருப்பேனேயானால், அவற்றினூடாகவே ஆற்றல் பெற்று நான் போராடத் தொடங்கிவிடுவேன். எனவே அவா ஆற்றலை உருவாக்கிறது என்பது எமக்குப் புலப்படுகிறது. அந்த ஆற்றலும் அவா தான். அப்படிப் பார்க்கும் போது நான் மறுபடியும் பழைய களத்திற்கே திரும்பிவந்து விடுகின்றேன். எனது உணர்வு நிலையிலிருக்கும் அவா, முரண்பாடு, இன்பம் போன்றவையெல்லாம் தாமே தமது ஆற்றல்களைப் பிறப்பிக்கின்றன. சுருங்கக்கூறின் புறஇயல் மெய்மை தனது சொந்த ஆற்றலைப் பிறப்பிக்கின்றது. இந்த ஆற்றல் உண்மையின் ஆற்றலைவிட வித்தியாசமானது.
எண்ணத்தின் செயற்பாடுகள் யாவற்றிற்கும் மூளையே ஊட்டமளிக்கிறது. குழம்பிப்போயுள்ள எண்ணத்தின் செயற்பாடுகளுக்கு மூளை ஊட்டமளிக்கவிட்டால், எண்ணங்கள் நேராகலாம். ஆற்றல் நேராக ஓடுமானால் புறஇயல் மெய்மை இல்லாமல் இருக்கும். அத்தகைய ஆற்றல் முடிவற்றது. ஏனெனில் அது உராய்வுக்கு உள்ளாவதில்லை. புறஇயல் மெய்மையை உண்மை புரிந்து கொள்ளும் போது புறஇயல் மெய்மை நேராகச் செற்படும். அப்போது ஒருவழித் தொடர்பே இருக்கும். இவ் வழியைத்தான் உண்மையும் விரும்புகிறது. ஆனால் இவ்வழி, உண்மையை விரும்புவதில்லை. இத்தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் புறஇயல் மெய்மை உண்மையாய் இயங்கத் தொடங்கிவிடும். இந்நிலையில் ஆற்றலின் (energy) விரயத்துக்கோ (dissipation), குழப்பத்திற்கோ இடமில்லை. இங்கே தான் தியானம் முக்கியத்துவம் பெறுகின்றது. தியானம் (meditation) என்பது, எல்லோரும் நினைப்பதுபோல், ஒரு பொருளின் மூல இயல்பிலிருந்து (meditation)  இன்னொரு பொருளின் மூல இயல்பிற்கு அசைவதல்ல. தியானம் என்பது என்றும் உள்ளதை உண்மையாக பார்ப்பதேயாகும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 03 May 2024 16:18
TamilNet
HASH(0x560cdda32980)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 03 May 2024 16:18


புதினம்
Fri, 03 May 2024 16:18
















     இதுவரை:  24855366 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1799 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com