அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 20 January 2025

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 27-28
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 27-28   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 11 July 2005

27.

ஐப்பசி பிறந்தது. கூடவே முதல்மழையும் பெய்தது. மண்ணில் மறைந்துகிடந்த நெல்மணிகள் முளைவிட்டன. ஈரஞ்சுவறிக் கடுமையாய்க் கிடந்த வளமான மண்ணின் மடியில் பயிர் முனைகள் தோன்றின. கார்த்திகை முற்பகுதிக்குள் கதிராமனின் புதுப்பில இளம்பச்சைப் போர்வையால் தன்னை மூடிக்கொண்டது. திரும்பிய திசையெல்லாம் ஈரம் குளித்த பசுமை! புதுக்காடு செய்யவேண்டும் அல்லது புதையல் எடுக்க வேண்டுமென்பர். இம்முறை அதிக மழை பெய்யாதிருந்துங்கூட புதுக்காடு சேட்டமாகத்தான் இருந்தது. மண்ணின் வளத்தையுண்டு மதர்த்து வளரும் நெற்பயிரின் மத்தியில் கதிராமனும் பதஞ்சலியும் கைகோர்த்துத் திரிந்தனர். கண்ணை இமை காப்பதுபோல் தன் வயலைக் காத்துவந்த கதிராமனின் கைதேர்ந்த பராமரிப்பில் அவன் வயல் செழித்தது. குடலைப் பருவங் கடந்து, பார்த்த கண்ணுக்குக் கதிராகிப், பின் கலங்கல் கதிராக்கி, இறுதியில் ஒரே கதிர்க் காடாகக் காட்சியளித்தது. அத்தனையும் பதரில்லா அசல் நெல்மணிகள்!

கதிராமனுடைய வளவும் வளங்கொழித்தது. தோட்டத்தில் கத்தரியும், கொச்சியும், வெங்காயமும், வெண்டியுமாகத் தளதளவென வளர்ந்து நின்றன. அவை பிஞ்சுபிடித்துக் காய்த்துக் குலுங்கியபோது பதஞ்சலி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கதிராமனுடைய வயலும் வளவும் எவ்வளவு செழிப்புற்றதோ அதற்கு மாறாக, மலையரின் தோட்டமும், தறையும் வழமையான செழிப்பை இழந்துபோய் ஏதோ கடமைக்கு விளைந்திருந்தன.

இவற்றையெல்லாம் கண்ட மலையர் உற்சாகமிழந்து போனார். அவலநிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சூழலில் துணிவோடு இறங்கி, அவற்றைத் திருத்தும் நோக்கமே இல்லாது, அடிக்கடி கரடியர் வளவுக்குப் போக ஆரம்பித்தார். நல்ல நாள் விசேஷங்களில் குடித்தவர் இப்போ அடிக்கடி சாராயம் வாங்கிவந்து குடிக்கத் தொடங்கினார். போதை மயக்கத்தில், தான் தண்ணிமுறிப்புக் கிராமசபை அங்கத்தினராக வரப்போவதையிட்டுப் பேசி மகிழ்ந்து கொண்டார். கரடியரும் அவருடைய மனதை நன்கு புரிந்து கொண்டவராய் மலையருடைய ஆசைகட்குத் தூபமிட்டுத் தானும் இலவசமாகக் குடித்துக் கொண்டார்.

இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் பாலியார் கவனித்திருந்தாலும், தன் கருத்தைக் கூறும் தைரியம் அவளுக்கு இயற்கையாகவே இருக்கவில்லை. கதிராமனையும், பதஞ்சலியையும் காணாத கவலை அவளுடைய இதயத்தை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய இயல்பான சுறுசுறுப்பையும் இழந்து, இந்தப் பத்து மாதங்களுள் பத்து வயது கூடியவள்போல் தோற்றமளித்தாள். கதிராமனும் பதஞ்சலியும் எப்படி இருக்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? என்பனவற்றை, மலையர் வீட்டிலில்லாத சமயங்களில், அங்கு வருபவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதிலேயே பாலியாரின் கவனஞ் சென்றது. அந்தச் செய்திகள் அளித்த தெம்பினாலேயே அவள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

 
28.

ஒருபக்கம் அடர்ந்த காட்டையும், மறுபக்கம் செந்நெல் வயல்களையும் கொண்டிருந்த செம்மண் சாலையிலே தண்ணிமுறிப்பை நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். அவனுடைய நெஞ்சில் உற்சாகமிக்க எண்ணங்கள் நிறைந்திருந்தன.

சுந்தரலிங்கத்துக்கும் கதிராமனின் வயதுதான் இருக்கும். சிவந்த நிறமும், மென்மையான உடல்வாகும் கொண்ட அவனுடைய விரல்கள் பெண்களுடையவை போன்று நளினமாகவிருந்தன. கருகருவென்று தடித்து வளர்ந்த புருவங்களின் கீழே, அகன்றிருந்த அவன் விழிகளில் பளிச்சிடும் ஒளவீச்சு!

அவன் தண்ணிமுறிப்பை நெருங்கிய சமயம் பாதையின் வலதுபுறம் சற்றுவிலகித் தெரிந்த கதிராமனின் குடிசை அவனுடைய கண்களில் பட்டது. கோணாமலையரின் வளவு இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு சாலையோரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாய்க்காலில் இறங்கிக் குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.

பச்சைப் பசேல் என்றிருந்த தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அந்தக் கட்டுக்கோப்பான குடிசையின் எளிமையான அழகு சுந்தரத்தினுடைய மனதை மிகவுங் கவர்ந்தது. சுற்றிவரப் போடப்பட்டிருந்த வெட்டுவேலியின் முற்புறத்தில் இருந்த ஒரு கவட்டை மரத்திலான கடப்பு வழியாக அவன் அந்த வளவுக்குள் நுழைந்தான். அங்கு ஆளரவம் எதுவுமில்லை. சுத்தமாகப் பெருக்கப்பட்டு, ஓரங்களில் வாடாமல்லிகைச் செடிகள் சூழவிருந்த முற்றத்தில் நின்றுகொண்டு, 'வீட்டுக்காறர்' என்று ஒருதடவை சுந்தரலிங்கம் கூப்பிட்டான். அவன் அழைத்த ஒலிகேட்டு, வேலியின் ஓரத்தே ஓங்கி வளர்ந்திருந்த வீரை மரத்திலிருந்த தில்லம் புறாக்கள் சடசவென இறக்கையடித்துக்கொண்டு கலைந்தன.

குடிசையின் பின்புறமாக வெங்காயப் பாத்தியில் களை பிடுங்கிக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதிலும் அவன் அழைத்த குரல் விழவே, 'ஆரது?' என்று கேட்டவாறே எழுந்து வந்தாள்.

அடர்த்தியாக வளர்ந்திருந்த கருங்குழலை அலட்சியமாக அள்ளிச் சொருகியிருந்த அவளுடைய செம்பொன் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. சட்டை அணியாமல் மார்புக்குக் குறுக்காகக் கட்டியிருந்த பச்சைநிறச் சேலை அவளின் மேனிக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. கல்யாணமாகிக் கன்னிமை கழிந்த திருப்தியான வாழ்விலே கிறங்கிப் போயிருந்த பதஞ்சலியின் தேகம் காலை வெய்யிலில் தங்கச்சிலை போன்று காட்சியளித்தது.

 'ஆர் நீங்கள்? ஆரிட்டை வந்தனீங்கள்' என்று அவள் கேட்டபோது பதில் எதுவும் உடனே சொல்லாத அளவுக்கு சுந்தரம் அவளின் அழகைக் கண்டு அசந்து போயிருந்தான். அவளைப் போன்றதொரு கட்டழகியை அவன் இதுவரை சினிமாக்களில்கூடப் பார்த்ததில்லை. நாவற்பழங்கள் போலக் கறுத்து ஈரப் பசுமையுடன் விளங்கிய அவளுடைய விழிகளில் வெளிப்பட்ட காந்த ஒளி, அவனை எதுவுமே பேசாமற் செய்துவிட்டது.

பிறமனிதன் தன்னை அப்பிடி உற்றுநோக்குவது பதஞ்சலிக்கு வேடிக்கையாக இருந்தது. 'என்ன அப்பிடிப் பாக்கிறியள்?' என்று கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். சுந்தரம் மேலும் தடுமாறிப் போய்விட்டான். தன்னுடைய பார்வையை இனங்கண்டு கொண்டாளோ என்ற தவிப்புடன், 'இதுதானே கோணாமலையற்றை வீடு?' என்று சமாளித்துக் கேட்டான்.

கள்ளம் கபடின்றி நேருக்குநேர் பதஞ்சலியின் கண்களை நேருக்குநேர் சந்திக்க அவனால் முடியவில்லை. வளவின் ஒரு பக்கத்தில் பூவும் பிஞ்சுமாகக் குலுங்கிய கத்தரிச் செடிகளின்மேல் தன் பர்வையை மேயவிடட்டான்.

'இல்லை! இது அவற்றை மோன் வீடு!' என்ற பதஞ்சலி, 'நிண்டு கொள்ளுங்கோ, அவர் வயலுக்கை நிக்கிறார், நான் போய் அவரைக் கூட்டிவாறன்!' என்று கூறிவிட்டு வயலை நோக்கித் துள்ளிக் கொண்டு ஓடினாள். அவளின் பின்னழகு சுந்தரத்தின் நெஞ்சைத் தளம்ப வைத்தது.

சுந்தரலிங்கம் படித்தவன்தான். அதிலும் நிறையக் கதைகளும், நாவல்களும் முறையாகப் படித்திருந்தான். அவற்றில் அனேகமானவை காதல் என்ற புனிதமான உறவைப் பற்றியும், அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களையுமிட்டு மிக அழகாகச் சித்தரித்திருந்ததுடன் கற்பு, பண்பு என்பனபற்றியும் உயர்ந்த கருத்துக்களைக் கூறுபவையாக இருந்தன. தானும், தன் படிப்பும் என்றிருந்த அவனுடைய வாலிபநெஞ்சில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் மிக ஆழமாகப் பதிந்திருந்தன. பெண்ணழகையும், பெண்ணின் உறவையும் கூறும் பல கவிதைகளும் கதைகளும் அவனுடைய வாலிப உணர்வுகளைக் கூர்மைப் படுத்தியிருந்தபோதும், நற்பண்புகள் என அவன் தன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டிருந்த சில கருத்துக்களின் காரணமாக, எனக்கென்று ஒருத்தி இவ்வுலகில் பிறந்திருப்பாள். அவளைக் காணவேண்டும். கவிதைகளிலும், கதைகளிலும் கண்ட இன்பங்களை அவள் துணையுடன்தான் அனுபவிக்க வேண்டும், என்ற தன் வாலிப ஆசைகட்கு, வரம்பிட்டு வாழ்ந்தவன் அவன்.

எனவே, வேறொருவன் மனைவியாகிய பதஞ்சலியின் கவர்ச்சிமிக்க அழகைக் கண்ட சுந்தரத்தின் உள்ளம் அலைமோதித் தவித்தது. அப்போது பதஞ்சலி கணவனுடன் திரும்பிவரும் காட்சியைக் கண்டான். தான் எங்கோ முன்னர் கண்டு இரசித்த ஒரு ஓவியத்தின் ஞாபகம் அவனுக்குச் சட்டென்று வந்தது.

காட்டுப் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கும் ஒரு காட்டாற்றுக் கரை! அங்கே புற்றரையில் வில்லும் கையுமாகச் சாய்ந்திருக்கும் கார்வண்ண நிறங்கொண்ட சிவன்! அருகே அக்கினிக் கொழுந்துபோற் கையில் வேலுடன் முழங்கால்களை மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் உமையவள்! யாரோ ஒரு ஓவியன் தன் கைத்திறமையெல்லாம் ஒன்றுகூட்டி, சிவன் பார்வதியை வேடுவக்கோலத்தில் வரைந்திருந்த அந்தச் சித்திரத்தைச் சுந்தரலிங்கம் மிகவும் இரசித்திருந்தான்.

இதோ கண்ணெதிரே, இருண்ட காட்டைப்போன்ற கரிய நிறத்தவனான கதிராமன், வலிமையான உடலில் தசைகள் அசையக் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் வழமையாகக் காணப்படும் இளமுறுவல், இப்போ பதஞ்சலி ஏதோ கூறக்கேட்டு மலர்ந்திருந்தது. கருங்காலி மரத்தைச் சுற்றிப்படரும் அல்லைக் கொடிபோலப் பதஞ்சலி அவனை அணைந்து கொண்டே வந்தாள். தன்னுடைய அங்கங்களின் அழகும், கவர்ச்சியும் வேற்று மனிதனுடைய மனதில் விபரீதமான உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கக் கூடுமென்று அறியாத காரணத்தினால் அவள் ஓடி ஒளியவுமில்லை, நாணிக் கோணவுமில்லை.

கதிராமன் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருக்கப் பதஞ்சலி குடிசையை ஒட்டியிருந்த குசினிக்குள் நுழைந்து தேநீர் தயாரித்தாள். சுந்தரம் தண்ணிமுறிப்புக்கு வந்த நோக்கத்தை அறிந்த கதிராமன், தகப்பனுடைய வளவுக்குச் செல்லும் தேவையான உதவிகளைத் தானும் செய்வதாகக் கூறினான். கதிராமனுடைய அமைதி நிறைந்த பண்பும், கம்பீரமும் சுந்தரத்தின் மனதை மிகவும் கவர்ந்தன. 'இந்தாருங்கோ!' என்று பதஞ்சலி தேநீரை நீட்டிபாது, அவளுடைய விரல்களின் அழகை மிக அண்மையில் சுந்தரம் பார்த்தான். பவளம்போன்ற நகங்களுடன் நீண்டு வளர்ந்திருந்த அந்த விரல்கள் அவன் மனதைக் கொள்ளை கொண்டன.

கதிராமனிடமும், பதஞ்சலியிடமும் விடைபெற்றுக் கொண்டு கோணாமலையர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட சுந்தரத்தின் நெஞ்சிலிருந்து, மலையேறி இறங்கியவன்போல் பெருமூச்சு வெளிப்பட்டது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 20 Jan 2025 08:47
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 20 Jan 2025 08:48


புதினம்
Mon, 20 Jan 2025 08:51
















     இதுவரை:  26416204 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3962 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com