அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 10 February 2025

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 17
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 17   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 14 May 2005

பதஞ்சலி பம்பரமாகச் சுழன்று வேலை செய்தாள். நொடிப் பொழுதுக்குள் பச்சரிசிச் சோறும், கத்தரிக்காய்க் குழம்பும், சொதியும் தயாராகிவிட்டன. அவனுக்குப் பிடிக்கும் என்றெண்ணி இறைச்சிக் கருவாட்டையும் எருமைநெய்யில் பொரித்திருந்தாள்.

குசினிப் படலை மறைவில் நின்றுகொண்டு 'சமையல் முடிஞ்சுது!" என்று சொன்ன பதஞ்சலியைப் பார்த்துச் சிரித்தான் கதிராமன். அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டாள். அவன் சிரித்துக் கொண்டே, 'மதியம் திரும்பீட்டுது. வாய்காலிலை முழுகிப்போட்டுவந்து கோயிலுக்குப் போவம்! வா!" என்று கூறிக்கொண்டு எழுந்தான். 'கொஞ்சம் பொறுங்கோ! கஞ்சி ஆத்திறன், மான்குட்டிக்குப் பருக்கிப் போட்டுப் போவம்" என்று கூறவும் மான்குட்டியை மறுபடியும் மடிமேல் வைத்துக் கொண்டான் கதிராமன். ஒரு பழந்துணியை எடுத்து, கஞ்சியில் நனைத்து வாயில் வைத்தபோது, முதலில் சுவைக்க மறுத்த மான்குட்டி, பின் ரசித்துக் குடித்தது. 'நீங்கள் இதைப் பருக்குங்கோ, நான் போய் முழுகீட்டு வாறன்" என்ற பதஞ்சலி, கொடியில் கிடந்த உடுத்தாடையை எடுத்துக்கொண்டு வளவை வளைத்துச் சென்ற வாய்க்காலை நோக்கிச் சென்றாள்.

மான்குட்டி கஞ்சியைக் குடித்து முடிக்கவும், பதஞ்சலி முழுகிவிட்டு ஈரப்புடவையுடன் வரவும் சரியாக இருந்தது. ஈரப்புடவையின் சலசலப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்த கதிராமனின் விழிகள் வியப்பால் விரிந்தன. கரும்பச்சை நிறமான அந்த ஈரப்புடவையில் அவளுடைய சந்தணமேனி பளிச்சென்றிருந்தது. புத்தம் புதுரோஜாவின் இதழ்களில் தெளித்த பனித்துளிகள்போல அவளுடைய முகத்தில் நீர்த்திவலைகள் உருண்டு வடிந்தன. இளமையின் பூரிப்பு பூத்துக் குலுங்கும் அவளின் பருவ உடலை ஒளிவு மறைவில்லாத ரசனையுடன் பார்த்தான் கதிராமன். அவனுடைய பார்வையைத் தாங்கமுடியாத பதஞ்சலி, சட்டென்று குடிசைக்குள் நுழைந்து படலையைச் சாத்திக் கொண்டாள். 'நீங்களும் போய் முழுகிப்போட்டு வாருங்கோவன்!" என உள்ளேயிருந்து நாணத்துடன் அவள் கூறியபோது, அவளின் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு, நொடிக்கொரு துடுக்கு வார்த்தை பேசும் இவளா இப்படி வெட்கப்படுகின்றாள் என்று எண்ணி வியந்துகொண்டே வாய்க்காலை நோக்கிச் சென்றான் கதிராமன்.

இதற்குள் பதஞ்சலி தன்னுடைய ஒரேயொரு சேலையை உடுத்திக்கொண்டு தகரப் பெட்டிக்குள்ளிருந்த உமாபதியின் வேட்டியை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தாள். ஈரம் துவட்டியபடி வரும் கதிராமனின் சுருண்ட கேசம் மாலை வெய்யிலில் பளபளத்தது. மழையில் நனைந்த காடுபோன்று அவனுடைய கருமேனி புதுக்கோலம் காட்டியது. வேட்டியை வாங்கி உடுத்திக்கொண்டு, சுரைக் குடுவைக்குள் இருந்த திருநீற்றையும் அள்ளிப் பூசிக்கொண்ட கதிராமன், 'தாலி, கைப்பூரம் எல்லாம் எடுத்துப் போட்டியே!" என்று கேட்டதற்குப் பதஞ்சலி தலையைக் குனிந்தவாறே உம் கொட்டினாள்.

'நட போவம்" என்று கூறிக்கொண்டே நடந்த அவனைத் தொடர்ந்து நிலத்தைப் பார்த்தவாறே நடந்தாள் பதஞ்சலி. தலைநிமிர்ந்து மலையர் வீட்டுப் பக்கம் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. தேகம் இலேசாக நடுங்கியது. கதிராமனும் அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவன்போல், 'ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! எல்லாத்துக்கும் நான் இருக்கிறன்!" என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அவளைத் தேற்றினான். 'இனிமேல் எல்லாத்துக்கும் என்ன, எல்லாமே நீங்கள்தான்" என்று மனதுக்குள் நினைத்தவாறே அவள், அவன் பின்னே சென்றுகொண்டிருந்தாள்.

முற்றத்தில் மாமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த மலையருக்கு, கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து போகும் காட்சி பளிச்சென்று தெரிந்தது. விழிகளை இடுக்கிக்கொண்டு கூர்ந்து கவனித்தவர், அவர்கள் இருவரும் தேரோடும் வீதியில் திரும்பி, குருந்தூர் ஐயன்கோவில் பக்கம் போவதைக் கண்டார். 'ஓகோ! மாப்பிளை பொம்பிளை ஐயன் கோயிலடிக்குப் போகினம்!" என்று கறுவிக் கொண்டார். இக்காட்சி, அணைந்துகொண்டு போகும் நெருப்பில் நெய்யை வார்த்ததுபோல் அவருடைய சினத்தை மீண்டும் கிளப்பியது. அவருக்கு வந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக்கொண்டு போய், அவர்களுடைய தலகளைச் சீவி எறிந்திருப்பார். ஆனால் என்னதான் ஆத்திரம் ஏற்பட்டபோதும், அவர்கள் ஐயன் கோவிலுக்குப் போகிறார்கள் என்று அறிந்ததும் அடங்கிப் போனார்.

இந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஐயன் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல, கண்கூடாகக் காட்டும் தெய்வமாகவும் இருந்தது. காட்டில் வினை மிருகங்கள் தாக்க வருகையில், 'ஐயனே!" என்று கூவினால் போதும் அவை தூர விலகிப் போய்விடும். இப்பேர்ப்பட்ட ஐயனுடைய சக்தியில் கோணாமலையருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. எனவேதான் ஐயனிடம் செல்பவர்களுக்கு வில்லங்கம் விளைவிப்பது பாரதூரமானது என அடங்கிப் போனார்.

இருப்பினும் அவருடைய சுயகுணம் அவரைவிட்டு நீங்கிவிடுமா? 'இவையளுக்குப் படிப்பிக்கிறன் நல்லபாடம்!" என்று கறுவிக்கொண்டே, 'இஞ்சை வாடா மணியம்!" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூப்பிட்டார் மலையர். 'போய் எருமையளைச் சாய்ச்சுக் கொண்டு வாடா!, இண்டைக்கு உமாபதியின்ரை வளவுக்கைதான் பட்டி அடைக்கிறது!" என்று அவர் சீறவும், மணியன் ராசுவையும் கூட்டிக்கொண்ட சென்று, குளக்கட்டின்கீழ் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளை விரட்டிக்கொண்டு வந்தான்.

அவர்களுடன் கூடவே எழுந்துபோன மலையர், பதஞ்சலி வளவுப் படலையைப் பிடுங்கித் தூர வீசினார். 'நான் வெட்டிக் குடுத்த நிலம்! நான் கட்டிக் குடுத்த வீடு! எனக்குத் துரோகம் செய்யிறவை என்ரை வளவுக்கை இருக்கிறதோ!" என்று சினத்துடன் கர்ஜித்து, எருமைகளை ஓட்டிவந்து பதஞ்சலியின் வளவுக்குள் சாய்த்தார் மலையர். எருமையினம் மாலைவேளையில் மழைமேகம்போல உமாபதியின் வளவுக்குள் புகுந்தன. செழிப்புடன் காய்த்துக் குலுங்கிய, பதஞ்சலியின் அருமையான தோட்டம் எருமைகளின் கால்களின்கீழ் சிக்கித் துவம்சமாகின. மேலும், மலையர் கையில் வைத்திருந்த கேட்டியினால் மாடுகளை ஓங்கியடிக்கவும், அவை ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு, குடிசையையும் குசினியையும் இடித்து விழுத்திக்கொண்டு இடறுப்பட்டன. அந்தக் குடிசைக்கு நெருப்பு வைப்பதற்குக்கூட மலையருக்கு மனதாயிருந்தும், தன்னுடைய எருமைகள் பாதிக்கப்பட்டு விடுமே என்ற காரணத்தினால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அந்தச் சின்னஞ்சிறு வளவு கணப்பொழுதுக்குள் சூறாவளியில் சிக்கிய சோலையைப் போன்று சிதைந்தது. அதன் பின்னர்தான் மலையரின் சினம் சற்றுத் தணிந்தது. 'இனிப் பாப்பம், மாப்பிளை பொம்பிளையவை என்ன செய்யினமெண்டு!" என்று கூறிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்குப் போனார்.

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 10 Feb 2025 15:03
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 10 Feb 2025 15:06


புதினம்
Mon, 10 Feb 2025 15:26
















     இதுவரை:  26558981 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6425 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com