அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் 25 - 26   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 03 December 2007
25.
பெத்தாச்சியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றெனினும் அது தவிர்க்க முடியாத ஒன்று எனக் காலகதியில் உணர்ந்து கொண்ட அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் தங்கள் தங்கள் மேய்ச்சற் தரைகளை நோக்கிப் போய்விட்டார்கள். நிர்மலாவுக்கும் வன்னியராசனுடன் நெடுங்கேணி மகாவித்தியாலயத்திலேயே இடங் கிடைத்ததால், அவாகளிருவரும் நெடுங்கேணியிலேயே வசித்தனர். பவளம் கணவனுடன் பழம்பாசியில் இருந்தாள். தோட்டத்திலே சித்திராவுடனும், விஜயாவுடனும் செல்லையர் துணையாக இருந்தார்.
விஜயா இளமையின் எல்லைக்கோட்டில் பூத்துக் குலுங்கினாள். தன் வயதிற்கேற்ற உணர்வுடகளுடன் வசந்தமான, பல இனம்புரியாத கனவுகளை அவள் இதயத்திலே தேக்கி வாழ்ந்தாள். சில சமயங்களில் அந்தக் கனவுகள், அவளுடைய விழிவாசல்களிலும் வந்து, அழகாக நர்த்தனம் புரிந்தன. சதா நாவல்களுடனும், வானொலி அருகிலும் தன் பொழுதில் பெரும்பகுதியைக் கழித்த அவள், இருந்திருந்தாற் போல் தன்னை மறந்து, கனவுகளில் லயித்துப் போவாள். இவ்வளவு நாட்களும் கூட்டிலிருந்த சிறு பறவைக்கு இறக்கைகள் முளைத்து நாளடைவில் அவை பலம்பெற்றுப் பறப்பதற்குத் தினவெடுக்கத் தொடங்கின.
ஒருநாள் மாலை, வானொலியில், மாதர் கேட்டவை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயா, நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, வளவு வாசலடியைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ நிற்பது தெரியவே, அவள் எழுந்து வாசலடிக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
சிவந்த முகமும், சுருண்ட கேசமும் உடைய அந்த இளைஞன் யாரென்று ஒருகணம் விஜயா நினைவுகூர முயன்றபோது, அவளைக் கண்ட அந்த இளைஞனுடைய விழிகள் ஆச்சரியத்தால் அகன்று, முகபாவமே மாறிப்போயிற்று! 'சித்திரா!" என அவன் தன்னை அடக்கமாக அழைத்தபோது, அவனை மீண்டும் ஏற இறங்க நோக்கிய விஜயா, அவனை வரவேற்கக்கூடத் தோன்றாமல், 'அக்கா! அக்கா!" என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டை நோக்கித் துள்ளியோடினாள். 
சித்திரா அங்கு இல்லாமற் போகவே, அவள் வழமையாக வேலை செய்யும் வாழைத்தோட்டம் பக்கம் ஓடிய விஜயாவின் சந்தடி கேட்டுச் சித்திரா நிமிர்ந்து பார்த்தாள். 'அக்கா! அத்தான் வந்திருக்கிறார்!" என்று விஜயா மூச்சிரைக்கக் கூறியபோது, இவளுக்கென்ன விசரோ எனச் சித்திரா நினைத்தாள். விஜயா, அத்தான் வந்திருக்கிறார்! என்றபோது, அவளுக்குப் பழக்க தோஷத்தில் முதலில் குமாருவுடைய நினைவுதான் முன்வந்தது. பின் சட்டென அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தபோது, அவள் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.
அவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாறுதலையும், அவள் எதுவுமே பேசமுடியாமல் நிற்பதையும் கவனித்த விஜயா, 'நான் போய் அவரை இருக்கச் சொல்லுறன், நீ வா!" என்று கூறிவிட்டு, மீண்டும் வாசலை நோக்கி ஓடினாள்.
 
 
26.
யாழ்தேவியில் மாங்குளம் வந்த கங்காதரன் அங்கு ஒரு கடைவாசலில் முல்லைத்தீவு பஸ்சுக்காகக் காத்திருக்கையில், தண்ணீரூற்றிலே அவனுடன் ஆரம்பக் கல்வி கற்றவனும், அவனுக்கு ஓரளவு பழக்கமுமான தருமலிங்கம் தற்செயலாக அவ்விடம் வந்தபோது, கங்காதரனுக்கு ஊருக்கே போய்ச் சேர்ந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.
மிகச் சிறிய வயதிலேயே யாழ்ப்பாணத்தில் கல்விகற்கச் சென்றுவிட்டதனாலும், விடுமுறைக்கு வருகையிலும் யாருடனும் அதிகம் பழகச் சந்தர்ப்பம் கிடைக்காமையாலும், கங்காதரனுக்கு ஊரில் நெருங்கிய நண்பர்கள் இருக்கவில்லை.
இப்போ முல்லைத்தீவுக்குப் போகும் பஸ்சுக்காகக் காத்திருந்த தருமலிங்கத்துடன் அவன் இந்த இரண்டு வருடங்களுக்குள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்றிந்து கொண்டான். மணமுடித்து ஆறுமாதத்திலேயே சித்திரா தன் கணவனை அகாலமாக இழந்தது பற்றித் தருமலிங்கம் கூறியபோது கங்காதரன் திகைத்துப் போனான்.
தருமலிங்கத்துக்கும் கங்காதரனுடைய குடும்ப விஷயங்கள் ஓரளவு தெரியும். வன்னியா வளவுக்காறருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அவர்கள் இன்று அடைந்துள்ள நன்னிலையையும், குலசேகரத்தார் தன் மகனுக்குத் தெரிவிக்காது விட்ட காரணம் அவனுக்குப் புரிந்தது.
எனவே கங்காதரனுக்கு ஏற்பட்ட திகைப்பையும், கலவரத்தையும் கண்டு தருமலிங்கம் நடந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாகக் கூறியபோது, அவற்றையெல்லாம் துடிக்கும் நெஞ்சுடன் கேட்டான் கங்காதரன். விபரங்களை அறிந்தபோது தன்னுடைய தகப்பனார் செய்திருக்கக்கூடிய சதிகளையும் அவன் ஊகித்து அறிந்து கொண்டான். 
அவர்மேல் எல்லையற்ற வெறுப்புடன் அவன் தன் வீட்டுக்குச் சென்றபோது தன் தாய், தந்தையருடைய நிலமை அவனுடைய இதயத்தை உருக்கியது. காணி பூமியை இழந்துவிட்ட குலசேகரத்தாரில் பழைய திமிரும், மிடுக்கும் காணப்படவில்லை. இரத்த புஷ்டியாய் வளையவந்த தாய் படுக்கையில் கிடந்தாள்.
கங்காதரனைக் கண்டதும் அவள் அவனைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கி விட்டாள். தகப்பன், மகனுடைய உருவ வளர்ச்சியைக் கண்டு மனதுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர்களுடன் வெகுநேரம் இருந்து தன்னைப் பற்றியும் தான் பெற்ற பட்டத்தையிட்டும் கூறி அவர்களுடன் மத்தியான உணவையும் அருந்தியபின் மாலையில் அவன் வெளியே புறப்பட்டபோது, 'எங்கை ராசா போறாய்?" என்று தாய் கேட்டாள். 'சித்திரா வீட்டை!" என்று அவன் பதில் சொன்னபோது, 'நீ ஏன் மோனை இப்ப அங்கை போறாய்?" என்று குலசேகரத்தார் தொடங்கவே, 'நீங்கள் செய்ததுகளெல்லாம் எனக்குத் தெரியும்! இனிமேலாகிலும் என்னை என்ரை எண்ணப்படி நடக்க விடுங்கோ!" என்று அவன் அமைதியாக ஆனால் உறுதியாகக் கூறிப் புறப்பட்டபோது, மகன் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் எவ்வளவோ மாறிப்போய்விட்டாள் என்பதை அவனுடைய பெற்றோர் உணர்ந்து கொண்டனர்.
 

     இதுவரை:  24841449 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 9595 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com