அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 18   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 20 May 2005

வண்ணாத்தி மோட்டை என்றழைக்கப்படும் பெரிய நீர்மடுவை வளைத்துச் சென்று, சிறியதொரு குன்றின்மேல் ஏறும் அந்தப் பாதையில், பதஞ்சலி கதிராமனின் அடிகளைப் பின்பற்றிச் சென்றாள்.

குன்றின் மேற்பகுதியில் ஒரு சிறிய வெளி. வெளியின் நடுவே ஒரு சூலம். அதன் முன்னே கற்பூரம் வைத்துக் கொளுத்தும் கல்லொன்று. இதுதான் குருந்தூர் ஐயன் கோவில்.

மடித்துக் கட்டியிருந்த வேட்டியைப் பயபக்தியுடன் அவிழ்த்துவிட்டு, பதஞ்சலியிடம் கற்பூரத்தையும், தீப்பெட்டியையும் வாங்கிய கதிராமன், அந்தக் கல்லின்மேல் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தினான். அடர்ந்த காட்டின் நடுவே கதிராமன் ஏற்றிய கற்பூரம் பிரகாசமாக எரிந்தது. அண்மையிலிருந்த மரங்களிலிருந்து காட்டுப்பறவைகள் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. வண்ணாத்தி மோட்டையைத் தழுவிவந்த ஈரக்காற்று அவர்களைத் தழுவிச் செல்கையில் பதஞ்சலிக்கு ரோமங்கள் சிலிர்த்தன.

இரு கைகளினாலும், தாலிகோர்த்திருந்த சங்கிலியைக் கதிராமனிடம் கொடுத்துவிட்டு, கைகளைக் கூப்பித்தொழுத வண்ணம் பதஞ்சலி மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். விழிகளை மூடித் தொழுதுநின்ற அந்தப் பதினாறு வயதுப் பதஞ்சலி, எப்போதோ இறந்துபோன தன் தாயையும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மறைந்துபோன தன்னுடைய அப்புவையும், தன்மேல் பாசத்தைச் சொரிந்த பாலியாரையும் நினைத்துக் கொண்டாள்.

கதிராமன் 'ஐயனே!" என்று மனதுக்குள் நிதானமாக வேண்டிக்கொண்டு, பதஞ்சலியின் அழகான கழுத்தைச் சுற்றி தாலி கோர்த்த சங்கிலியைக் கட்டிவிட்டு, ஒருமுறை கரங்களைக் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டான். அந்நேரம் மெல்ல எழுந்துகொண்ட பதஞ்சலி, அவனை அணைந்தபடியே, பிரகாசமாக எரியும் கற்பூரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். கதிராமனுடைய கரம் அவளைச் சுற்றி ஆதரவாகப் படர்ந்திருந்தது. புனிதம் நிறைந்த அந்த மாலைப்பொழுதில் இரு இளம் உள்ளங்கள் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து புனிதமான உறவில் திளைத்தன.

'பசிக்குது! வா வீட்டை போவம்!" என்று கதிராமன் அழைத்தபோது, அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாதவளாய்ப் பதஞ்சலி அவனைப் பின்தொடர்ந்தாள். திரும்பி வீட்டுக்குப் போகாமலே இப்படியே நடுக்காட்டினுள் போய் ஒரு மடுக்கரையில் குடிசையைக் கடடிக்கொண்டு தானும் கதிராமனும் வாழ்ந்தாலென்ன என்று அவளுடைய பேதை மனம் ஆசைப்பட்டது. அமைதி நிறைந்த அந்தக் காட்டினுள்ளே கதிராமனின் துணையுடன் நிரந்தரமாகத் தங்கிவிடப் பதஞ்சலி விரும்பினாள். வீடு நெருங்க நெருங்க, மலையர் கோபத்தில் தங்களை என்ன செய்வாரோ என்ற பயம் பதஞ்சலியைப் பற்றிக் கொண்டது. அவனுடைய கையைப் பிடித்தவாறே நிலத்தை நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்தவளாய் நடந்து கொண்டிருந்த பதஞ்சலி, தன்னுடன் கூடவே வந்துகொண்டிருந்த கதிராமனின் நடை திடீரென்று நின்றதும் துணுக்குற்றுப் போய் நிமிர்ந்து பார்த்தாள். அங்கு கண்ட காட்சி அவளை அதிரவைத்தது.

அவளும் உமாபதியும் வாழ்ந்த அந்தச் சின்னஞ்சிறு குடிசை சரிந்துபோய்க் கிடந்தது. அவள் ஆசையுடன் நட்டுவைத்த பயிர்கொடிகள் அலங்கோலமாகச் சிதைந்து கிடந்தன. அவள் அழகாகப் பெருக்கிச் சுத்தமாக வைதத்திருந்த வெண்மணல் பரவிய முற்றத்தில் எருமைகள் தாறுமாறாகத் திரிந்தன.

பதஞ்சலியின் கரத்தை விடுவித்துக்கொண்டு முன்னால் சென்ற கதிராமன் ஒருகணப் பொழுதுக்குள்ளே நடந்ததைப் புரிந்துகொண்டான். அந்தக் கிராமத்திலே வேறு எவருக்குமே ஈவிரக்கமின்றி இப்படியானதொரு செயலைச் செய்ய மனம் வராது. துணிவும் இராது. விக்கித்துப்போய் நின்ற பதஞ்சலியைத் திரும்பிப் பார்த்த கதிராமன், 'இதெல்லாம் அபபுவின்ரை அலுவல்தான். எங்களை இந்த ஊரைவிட்டே கலைக்கிறதுக்குத்தான் இந்த வேலை செய்திருக்கிறார்". என்று ஆத்திரத்துடன் கூறியவன், 'நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! வா உன்ரை சாமான்களை எடுத்துக்கொண்டு போவம்!" என்றவாறு வளவுக்குள் நுழைந்தான். பதஞ்சலி பேச்சு மூச்சற்றுக் கதிராமனைப் பின்தொடர்ந்தாள். குடிசை வாசலில் அவள் கண்ட காட்சி, இதயத்தை விம்ம வைத்தது. அன்று காலையில் காட்டிலிருந்து கொண்டுவந்த மான்குட்டி, எருமைகளின் குளம்புகளின் கீழ் அகப்பட்டு நசுங்கிச் செத்துக் கிடந்தது. பதஞ்சலி விம்மி விம்மி அழத்தொடங்கினாள். அவளுடைய கலங்கிய விழிகளையும், அந்த வளவு கிடந்த அலங்கோல நிலையையும் கண்ட கதிராமனின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தது.

'அழுதுகொண்டு நிண்டு என்ன செய்யிறது பதஞ்சலி? உன்ரை சாமான்களை எடு! நாங்கள் போவம்!" என்றவாறே அங்கு கிடந்த ஒரு சாக்கை எடுத்துக் குசினிக்குள் இருந்த அரிசி, மா, மற்றும் பாத்திரங்கள், போத்தல்கள் முதலியவற்றை அதனுள் அடைந்தான். விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய, பதஞ்சலியும் சரிந்துகிடந்த குடிசைக்குள் நுழைந்து தன் உடைகளையும், தகரப்பெட்டியையும், பாயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். கதிராமனின் விழிகளில் ஒரு தீவிரமான உறுதி பளிச்சிட்டது. 'வீடு வளவில்லாமல் செய்துபோட்டால் நாங்கள் செத்துபோவம் எண்டு நினைச்சாராக்கும்! நாளைக்கிடையிலை எங்களுக்கெண்டு ஒரு சின்னக்குடில் எண்டாலும் கட்டி முடிக்காமல் விட்டால் நான் கதிராமன் இல்லை!" என்று சபதஞ் செய்துகொண்ட கதிராமனைப் பார்த்துச் சிலையாய் நின்றாள் பதஞ்சலி. 'ஏன் பதஞ்சலி எல்லாத்துக்கும் பயந்து சாகிறாய்? இப்ப என்ன நடந்து போச்சுது? எங்களுக்கெண்டு ஒரு வீடு வளவு வேணும். அவ்வளவுதானே?" என்று சொல்லிவிட்டு, 'நீ உதுகளை ஒரு பக்கத்திலை வைச்சிட்டுக் குசினிக்கை பார். சோறு, கறியெல்லாம் அப்பிடியே கிடக்குது. அதைக் கவனமாய் ஒரு பாத்திரத்திலை எடு. எப்பிடியும் இண்டைக்கு நீதான் எனக்குச் சோறுபோட்டுத் தரரோணும்" என்று அவன் கூறியதும், பதஞ்சலி ஒன்றுமே பேசாது, விழுந்துகிடந்த அந்தக் குசினிக்குள் புகுந்து, தான் ஆசையோடு சமைத்து வைத்த உணவு வகைகளைப் பார்த்தாள். அவை ஒரு பக்கீஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தன. இதற்குள் கதிராமன் உமாபதியின் கத்தி, மண்வெட்டி, கோடரி முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். பதஞ்சலி சாப்பாட்டுப் பெட்டியைத் தலையில் பக்குவமாக வைத்துக்கொண்டு, பாயையும் ஈரமான உடைகளையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டாள். கதிராமன் 'நட! போவம்!" என்றான். அவன் எங்கு நட என்றாலும் அவள் நடப்பதற்குத் தயாராய் இருந்தாள். எந்த நிலையிலும் கலங்கிப்போகாத அவனுடைய ஆண்மை அவளுக்கு அளவற்ற ஆறுதலை அளித்தது. மிகவும் குறுகிய கால வேளைக்குள் அடுத்தடுத்துப் பல அவலங்களை அனுபவித்திருந்த அவளுக்கு, 'கவலைப்படாதை!" என்று அவன் கடிந்து கூறியத மிகவும் இதமாகவிருந்தது.

 


     இதுவரை:  24835178 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6459 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com