அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 29 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 16   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 04 May 2005

வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமனின் இதயம், பலவித உணர்ச்சிகளினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தண்ணிமுறிப்பின் இருண்ட காடுகளில் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் மடுக்களைப்போல் அமைதியும், ஆழமும, குளிர்ச்சியும் கொண்ட அவன் என்றுமே எல்லைமீறி உணர்ச்சிவசப்பட்டதில்லை. தந்தையின்  சீற்றமும், தாயின் வேதனையும், பதஞ்சலியின் பரிதாபமான நிலையும் அவன் நெஞ்சைப் பிளந்தாலும் அவன் நிலை குலையவில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம் என்பதுபோல் அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவனையுமறியாமல் கால்கள் பதஞ்சலியின் குடிசைக்கு அவனை அழைத்துச் சென்றன.

அங்கே பதஞ்சலி பாயில் முகங்குப்புறக் கிடந்து அழுதுகொண்டிருந்தாள். அருகிற் சென்று, 'பதஞ்சலி!' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள். தன்னோடு அவளைச் சேர்த்தணத்துக் கொண்டே பாயில் உட்கார்ந்து கொண்ட கதிராமனின் செவிகளில், 'போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு!' என்று மலையர் ஏசியது திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஆதரவற்று வாடும் பதஞ்சலியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று கதிராமன் தாயிடம் கூறியபோதும்ää அவன் மனதில், தான் அவளை மணக்கவேண்டும் என்ற நினைவு தோன்றவில்லை. அவள் தண்ணிமுறிப்பைவிட்டுப் போய்விடக் கூடாதென்ற ஒரு தவிப்பே அவனைப் பாலியரிடம் அப்படிக் கேட்கவைத்தது. காரணமும் நோக்கமும் தெரியாதிருந்த அவன் உணர்ச்சிகளுக்கு இப்போ ஒரு முழுமையான வடிவத்தைக் கோணாமலையரின் வார்த்தைகள் வலியுறுத்தி வளர்த்துக் கொண்டிருந்தன.

கதிராமனுடைய அணைப்பிலே பதஞ்சலிக்குத் தன் துயரமெல்லாம் விலகிவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய அழுகை கொஞ்சங் கொஞ்சமாக அடங்கியது. தன்னை அன்புடன் அணைத்திருந்த அவனுடைய கைகளை அவள் விலக்கவில்லை. அந்த முரட்டுக் கரங்களின் பிடிக்குள்ளேயே அடங்கிப்போய் அமைதியாக இருந்தாள்.

கதிராமன் குனிந்து, அவளுடைய முகத்தை நிமிர்த்தி, 'பதஞ்சலி! உன்னை நான் கலியாணம் முடிக்கப்போறன். இனிமேல் இஞ்சை உனனோடைதான் இருக்கப்போறன்' என்று சொன்னான். பதினாறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் அவள் முகத்தில் வெட்கமும், நாணமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய மௌனத்தை உணர்ந்த கதிராமன், 'என்ன பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கேட்டபோது, 'ஒண்டுமில்லை!' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னாள். சற்று நேரத்தின்பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனை நோக்கி, 'ஏன் என்னை எல்லாரும் வம்பிலை பிறந்தவள் எண்டு பேசுகினம்? அப்பிடி எண்டால் என்ன?' என்று குழந்தையைப் போலக் கேட்டாள். கதிராமன் உடனே அவளுக்குப் பதிலெதுவும் கூறவில்லை. சிறிதுநேர அமைதியின்பின் அவளைப் பார்த்து, 'உவையெல்லாம் சும்மா அப்பிடித்தான் கதைப்பினம்! ஆனா நீ ஒரு கலியாணம் முடிச்சு உனக்கொரு புருசன் வந்ததிட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம்! அப்பிடிப் பேசுறதுக்கும் நான் விடன்!' என்று ஆதரவும், உறுதியும் நிறைந்த குரலில் கூறினான்.

அவன் கூறிய விளக்கம் தெளிவாக இல்லையென்பது பதஞ்சலிக்குப் தெரிந்தது. ஆனால், அந்த வேளையில் அவனுடைய இதமான அணைப்புத் தந்த பாதுகாப்பும், அவனுடைய உறுதியான மொழிகளும், அவளுடைய வேதனைகளையெல்லாம் போக்கும் அற்புத மருந்தைப் போன்றிருந்தன. அவனுடைய இறுக்கமான அணைப்பினுள் கட்டுண்டு கிடந்த அவளுக்குப் பெண்மையின் உணர்வுகளெல்லாம் மெல்ல விழித்தெழுந்துää விபரிக்க முடியாததொரு இன்பநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையிலேயே காலமெல்லாம இருக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.

'ஏன் பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கதிராமன் திரும்பவும் கேட்டபோதும், அவள் எதுவும் கூறாது அவனுடைய மார்பிலே முகம் பதித்தவளாக இருந்தாள். 'உனக்கு என்னை முடிக்க விருப்பமில்லையோ?' என்று அவன் மீண்டும் கேட்டபோதுää 'சிச்சீ...' என்று சட்டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். சற்றுமுன் விம்மியழுத பதஞ்சலியின் முகத்தில், இதுவரை காணாத புத்தம்புதுக் கோலங்களைக் கண்டு வியந்தவனாய்க் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னை அப்பிடிப் பாக்கிறியள்?' என்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்ட பதஞ்சலி, அவர்களுக்கருகில் வேடிக்கை பார்த்தவாறே கிடந்த மான்குட்டியை எடுத்து முகத்தோடு முகம் சேர்த்துக் கொஞ்சினாள்.

இதன்பின் அவர்களுக்கிடையில் வெகுநேரம் மௌனம் நிலவியது. வெளியே தில்லம் புறாக்களின் சீட்டியோசை மிக இனிமையாகக் கேட்டது. அவனிடமிருந்து மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்ட பதஞ்சலிää குடிசை மூலையிலிருந்த ஒரு தகரப்பெட்டியைத் திறந்து ஒரு ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அற்குள் சில பணநோட்டுக்கள்ää உமாபதி அவளுக்குச் செய்வித்துக் கொடுத்த தங்கச் சங்கிலி முதலியவைகள் இருந்தன. துணியால் சுற்றப்பட்டுப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து, சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்த்தாள். அதனுள் ஒரு தாலி இருந்தது. அதை மிகவும் பயபக்தியுடன் வெளியே எடுத்த பதஞ்சலி, 'இதுதான் அம்மாவின்ரை தாய்க்கு அப்பு கட்டின தாலி! என்ரை அம்மாவுக்குத் தாலி கட்டக் குடுத்து வைக்கேல்லை எண்டு அடிக்கடி அப்பு சொல்லும்.... இந்தத் தாலியை என்ரை சங்கிலியிலை கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ!....' என்றாள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டிய அவளுடைய இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்ட கதிராமன், 'இதைக் கொண்டுபோய் ஐயன் கோயிலடியிலை கட்டுவம்!' என உற்சாகத்துடன் கூறினான். அவள் மீண்டும் ஓலைப்பெட்டியைத் தகரப்பெட்டிக்குள் வைக்கும்போது, அதற்குள்ளிருந்த உமாபதியின் வேட்டி, சால்வை முதலியவற்றை எல்லையற்ற பாசப்பெருக்குடன் கண்களில் ஒற்றிக்கொண்டது, மறைந்துபோன உமாபதியின் கால்களில் விழுந்து மானசீகமாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போலிருந்தது.

துருவம் தெரியாத பருவம். எதை எப்படிச் செய்வதென்றே பதஞ்சலிக்குப் புரியவில்லை. கதிராமனும் கலியாணவீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறைகளை அறியமாட்டான். அயல் கிராமங்களில் ஏழைகளின் வீட்டில் நடக்கும் 'சோறு குடுக்கும்' வழக்கம் அவன் நினைவுக்கு வந்தது. கணவனாகப் போகிறவனுக்கு முதன்முதலில் தன்கையால் சோறுபோட்டுக் கொடுத்துவிட்டு, அவன் விடுகின்ற மீதியை மணப்பெண் சாப்பிட்டு விட்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய்விட்டனர் என்பது சம்பிரதாயம். இது ஞாபகத்திற்கு வரவேää பதஞ்சலியை நோக்கி, 'கெதியிலை அரிசியைப் போட்டுவைச்சிட்டு ஒரு கறி காய்ச்சு. கோயிலடியிலை போய்த் தாலியைக் கடடிப்போட்டு வந்து சாப்பிடுவம்!' என்று தீர்மானத்துடன் சொன்னான். பதஞ்சலி நாணம் மேலிட்டவளாகக் குசினியை நோக்கிச் சென்றாள்.

கதிராமன் வெளியே வந்து குடிசைத் திண்ணையில் மான்குட்டியுடன் உட்கார்ந்துகொண்டு, மடிக்குள் கிடந்த புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றிக் கொண்டான். 'கொஞ்ச நெருப்புக் கொண்டுவா பதஞ்சலி!' என்று அவன் கூப்பிட்டதும், அரிசியைக் களைந்து அடுப்பிலேற்றிய பதஞ்சலி, நெருப்புக் கொள்ளியொன்றைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று குசினிக்குள் நுழைந்துகொண்டாள். அவளுக்கு இப்போ அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மிகவும் வெட்கமாகவிருந்தது. சுருட்டைப் பற்றிக்கொண்ட கதிராமன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். ஏதோ காலங்காலமாகவே தாங்களிருவரும் கணவனும் மனைவியுமாய் இருந்தது போன்றதொரு நினைவு. காடுகளிலே திரிந்து காட்டு விலங்குகளையே கவனித்தவனுக்கு, உரிய பருவத்தில் தனக்கொரு துணையைத் தேடிக்கொள்வது புதினமாகவோ, விசித்திரமானதாகவோ படவில்லைப்போலும்.

 


     இதுவரை:  24833676 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6256 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com