அப்பால் தமிழ் அப்பால் தமிழ் :: தமிழர் விளையாட்டுகள்
தமிழர் விளையாட்டுகள்   அச்சுப்பிரதி 
எழுதியவர்: மாத்தளை சோமு  
Sunday, 04 September 2005

(ஈழத்தில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மாத்தளை சோமு, அவர்களின்  'வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்' என்ற நூல் வெளியாகியுள்ளது. அதில் தமிழரின் உலகம், மொழி, பிறப்பும் வாழ்வும், உழவு, உடை, உணவு, உடல் அறிவியல், தமிழர் மருத்துவம், இலக்கியம், நுண்கலை, தமிழிசை, ஆடல் கலை, அணிகலன், தாவரவியல், தமிழர் அளவைகள், கடல் நாகரிகம், கட்டடக் கலை, மண்ணியல், வானவியல், விளையாட்டு என இருபது தலைப்புகளில் எழுதியுள்ளார். அதிலிருந்து தமிழர் விளையாட்டுகள் என்ற பகுதி நன்றியுடன் இஙகு மீள்பிரசுரமாகின்றது.)

இன்றைக்கு உலகெங்கும் பரவியிருக்கிற கிரிக்கெட் (cricket), டென்னிஸ் (tenis), ஹாக்கி (hockey), பேட்மின்டன் (batminton), உதைப் பந்தாட்டம் (foot ball) எனப் பல விளையாட்டுகள்யாவுமே மேற்றிசை நாடுகளில் உருவாக்கப் பட்டவை. இவற்றைப் பரப்ப ஆங்கில ஏகாதி பத்தியம் தனது காலனித்துவ ஆட்சியின் மூலம் உதவியது. இன்றைக்கு மேற்சொன்ன விளையாட்டுகளோடு கூடிய வர்த்தகத்தின் தொகை கணக்கிட முடியாது. இவற்றின் மூலம் நேரடியாக - மறைமுகமாக லாபம் அடைந்தவர்கள் மேல்நாட்டவரே!

மேற்சொன்ன விளையாட்டுகளை ஆங்கிலத் திரைப்படங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தின. இதே போன்று புரூஸ்லீ என்ற நடிகரால் கராத்தே, குங்பூ, தேக்கேவா போன்ற விளையாட்டுகள் உலகெங்கும் பரவின. இதற்குத் தமிழகம் விதி விலக்கு அல்ல. தமிழகத்தில் சிறிய-பெரிய நகரங்களில் சீன, ஜப்பானிய விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுக்கிற சிறு சிறு நிலையங்கள் உருவாகிவிட்டன.

இவ்வகை விளையாட்டுகளைத் தமிழ்த் திரைப்பட நாயகர்களும் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். தமிழர்களைச் சுலபமாக சென்றடையக் கூடிய தொலைக்காட்சி ஒளிபரப்புகள், அந்நிய விளையாட்டுகளைத் தூக்கிப் பிடிக்கின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் வார இதழ்களும் ஏனைய ஊடகங்களும் இதே வழியையே பின்பற்றுகின்றன.

இதன் எதிரொலியாக கராத்தே, குங்பூ, தேக்கோவா போன்றவை பயிற்சி வகுப்புகளாக இங்கு பரவி இருக்கின்றன. பெண்களும் இவற்றைப் பழகுகின்றனர். ஏனையோர் கிரிக்கெட், பேட்மிட்டன், உதைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள். மிகக் குறைந்தோரே தமிழர் விளையாட்டுகளைப் பயின்று வருகிறார்கள்.

தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெள்ள மெள்ள தமிழர்களுக்கே மறந்து வருகிறது.

ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் கிராம விளையாட்டு களாகத் தள்ளப்பட்டன. கிராமங்களிலும் அவை வலுவிழந்து தள்ளப்பட்டன. அவை ஆண்களுக்கான சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில் பெண்களுக்கான தாயம் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, உயிர்மூச்சு, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.

நேற்றுவரை கிராமப்புறத் தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காண வில்லை. அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நியக் கலாசாரமேயாகும். கண் மூடித்தனமான ஆங்கில வழிக்கல்வியுடன் கூடிய நாகரிகம், கிராமத்துத் தமிழ்மரபுகளை இன்று எல்லாத் துறைகளிலும் அழித்து வருகிறது. ஆங்கிலம் சார்ந்த விளையாட்டு வேண்டாம் என்பது என் கருத்தல்ல. தமிழரின் விளையாட்டும் இருக்கட்டுமே. உலகெங்கும் வாழ்கிற எட்டு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டை முன் னெடுக்க முடியாதா என்ன? தமிழர் சுய அடை யாளத்தைப் பறிகொடுத்து இன்னோர் இனத்தின் அடையாளத்தைச் சுமக்க வேண்டுமா?

தமிழரின் விளையாட்டுகளைப் புறக்கணிப்பது நம்மை நாமே புறக்கணிப்பதற்குச் சமமானது.

சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும்.

தற்காலத்தில் உடல்பயிற்சி நிலையங்கள் இருப்பதைப் போல் சங்க காலத்தில் இருந்த தற்கான சான்றுகளாக போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பயிற்சிக் கூடங்களுக்காக இருந்திருக்கின்றன. பட்டினப் பாலையில் 'முரண்களரி' என்பது பயிற்சிக்கூடமே. இன்றைக்குக் களரி என்ற சொல், கேரளாவில் இருக்கிறது. களரிப் பணிக்கர் என்பது உடல்பயிற்சிக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியரே.

சங்க கால இலக்கியக் குறிப்புப்படி 37-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் விரிவாகக் காணலாம்.

1) ஊசல் எனும் ஊசலாட்டம்:
இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர் விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க காலத்தில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் இருக்கின்றன.

2) ஒரையாடல்:
மகளிர் ஆடும் ஒரு வகை விளையாட்டு, நண்டு, ஆமை என்பனவற்றைச் சிறு கோல் கொண்டு அலைத்து விளையாடும் விளையாட்டே ஒரையாடல் ஆகும். இன்றும் கடற்கரை, நதிக்கரை, குளக்கரை ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஊர்ந்து திரியும் சில பூச்சிகளைக் கோல் கொண்டு அலைத்து ஆடி மகிழ்வர்.

3) ஏறுகோள் :
இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளை உடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வலிமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுபற்றிக் கலித்தொகை, சிலப்பதி காரம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது. இதுவே இன்று சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுக்கட்டு என உருமாறித் தற்காலத்தில் நிகழ்ந்து வருகிறது.

4) குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும்:
குதிரை, யானை மூலம் ஓடுவது, அசைவது போன்ற விளையாட்டு. குதிரை ஓட்டமும் இதன் வழியே வந்ததுதான். இதுவும் பழங்கால விளையாட்டே!

5) சிறுதேர்:
தேரினை உருட்டியும் இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம், தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களில் தென்னை மரங்களிலிருந்து விழும் பிஞ்சு இளநீர்க் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர்.

6) நீர் விளையாடல்:
நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, பட கோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனைப் 'புனலாடல்' என்பர். தமிழில் சங்க இலக்கியங் களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவ்விளையாட்டு, மிகச் சிறப்பான இடம் பெற்றுள்ளது.

7) பந்து:
பந்தெற்களம், பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. பந்து என்றே சங்க இலக்கியம் விளக்குகிறது. பந்துகளைப் பஞ்சடைப் பந்து, செம்பொன் செய்த வரிப்பந்து, பூப்பந்து என்ற வகைகள் இருப்பதாக அதன் மூலம் தெரிகின்றது. இருபத்தொரு பந்துகளைப் பயன்படுத்தி 'எண்ணாயிரம் கை' பந்தடித்த மானணீகை என்ற பெண்ணைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.

8) கழங்காடுதல்:
மகளிர் விளையாட்டுகளில் கழங்காடுதல் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது சற்று மேடான பகுதிகளில் 'கழங்கினை' வைத்து (கழங்கு - சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) ஆடுவர். பொன்னாலான கழங்கினை வைத்துத் திண்ணைகளில் ஆடிய செய்தி, புறநாநூற்றிலும் பெரும்பாணாற்றுப்படையிலும் சொல்லப் படுகிறது. இப்பொழுது கழங்கிற்குப் பதில், சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

9) வட்டாடல்:
பண்டைத் தமிழர் விளையாட்டுகளில் சிறப்புற்றிருந்த ஒன்று வட்டாடுதல். (வட்டாடல்-வட்டை உருட்டிச் சூதாடுதல்) இதற்காக அரங்கம் இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம், ஒருவகைச் சூதாட்டத்தை ஒத்தது. கல்லாத சிறுவர்கள் வேப்ப மரத்து நிழலில் வட்டரங்கிழைத்து நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடிய செய்தியை நற்றிணையில் காணலாம். இவ்விளையாட்டைத் திருவள்ளுவர்,
அரங்கு இன்றி வட்டுஆடி அற்றேநிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல் (401)
என்ற திருக்குறளில் சுட்டிக் காட்டுகிறார். ஆகவே இந்த வட்டாடல் எனும் விளையாட்டு, குறள் காலத்து விளையாட்டு என்று ஆகிறபோது அதன் வயது 2036 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பது உறுதியாகத் தெரிகின்றது. எனவே பழந் தமிழரும் விளையாட்டுகளிலும் அறிவியல் வழி சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார் கள் என்பதே தமிழருக்கு மரபு சார்ந்த பெருமையாகும்.

தமிழர் ஒலிம்பிக்

தற்காலத்தில் எல்லாப் பொழுதுபோக்கு ஆட்டங்களையும் (டப்ஹஹ்ள்) விளையாட்டுக்களாக (எஹம்ங்ள்) எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு செயலை விளையாட்டாகக் கருத வேண்டுமானால் ஐந்து விதிகளுக்குள் அது அமைய வேண்டும். அந்த ஐந்து விதிகள்:
1) அமைப்பு கொண்ட விளையாட்டாக இருக்கவேண்டும்.
2) போட்டியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
3) இரண்டு அல்லது அதற்கு மேற்பட் டோர் குழுக்களாக இருந்து பங்கேற்க வேண்டும்.
4) வெற்றியை ஏற்றுக்கொள்ளத் தக்க விதிகளை உள்ளடக்கி இருக்கவேண்டும்.
5) பாதுகாப்புக் கவசம் கொண்டதாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட ஐந்து விதிகள் இருந்தால்தான் நவீன உலகில் ஒரு விளையாட்டு, உலக மயமாகக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் பார்க்கிற போது தமிழரின் தனித்துவமான விளையாட்டுகள் உலகமயமாக்கப் படுகிறபோது பல சிக்கல்களைச் சந்திக்கும். இது அனுபவபூர்வமான உண்மை.

மேலும் பழந்தமிழர் விளையாட்டுகள் பரவலாக்கபடாமல் குறிப்பிட்ட மக்கள் சார்ந்த பகுதியில் இருப்பதால் அவை எல்லைகளைக் கடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்நிய படையெடுப்புகளினால் இவ்விளையாட்டுகள் வலுவிழந்து கரையத் தொடங்கின. சில உருமாறிப் பெயர் மாறத் தொடங்கியது. உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மல், மற்போர்:
கருவிகளின் துணையில்லாமல் தமது உடல் வலிமையால் இருவர் தமக்குள் சண்டையிடும் ஒருவகை வீர விளையாட்டு. இதற்கு நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். மற்போரின் தொடக் கத்தை மற்பறை ஒலித்து அறிவிக்க, அரசர், வீரர், பெண்டிர் அனைவரும் காண மகிழ்ந்து குழுமிய செய்தியைப் 'பெருங்கதை' என்ற (52;3155-3117) இலக்கியத்திலே காணலாம். சிலப்பதிகாரத்தில் இருவர் மோதிய மல்யுத்தத்தை 'அளையும் யானை போற் பாய்ந்து மல்லொற்றியும்' என்று வர்ணித் துள்ளார் இளங்கோ அடிகள். அதாவது இரு யானைகள் மோதி பொருந்துவது போல் மல்யுத்தம் நிகழ்ந்துள்ளது.

நம்முடைய இந்த மல்யுத்தம் ஜப்பானில் அப்படியே விளையாட்டாக நிலவி வருகிறது. அது இங்கிருந்து போனதுதான். இன்று மல்யுத்தம் ஏனைய நாடுகளில் மேல்நாட்டினர் வகுத்த விதிமுறைகளுடன் மல்யுத்தமாக (ரதஉநபகஐசஎ) நடத்தப்படுகின்றது. அதே நேரத்தில் இவ்விளையாட்டு மாற்றம் பெற்றுப் பல தற்காப்புக் கலை விளையாட்டுகளாக உருப்பெற்றுள்ளது.

2) வில் விளையாட்டு:
வில் விளையாட்டு என்பது அம்பினைச் செறித்துக் குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் 'அதஇஏஉதவ' (வில்வித்தை) என்று அழைக்கப்படும். இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு 'ஒலிம்பிக்' வரை வந்துவிட்டது.

3) கலைக்கூத்து:
கலைக்கூத்து எனப்படும் கயிற்று நடனம். 60களிலே திரைப்படங்களிலே இருந்த இக்கலை, வலுவிழந்து போய் இருக்க, மேலை நாடுகளில் அது பல பரிணாமங்கள் பெற்று உடல்வித்தையாக (எவஙஅசஅபஐஇந) மாறி நிற்கிறது.

4) கிலி கிலியாடல்:
கிலி கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பி மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது.

5) கோழிப்போர்:

கோழிப்போர்-தமிழர்கள் விலங்கு கள், பறவைகள் போன்ற வற்றுக்கும் வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவற்றை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண் டிருந்தனர். சங்க இலக்கியமான குறுந் தொகையில் 'குப்பைக் கோழித் தனிப் போர் போல' என்று குறிப்பிடுவதிýருந்து கோழிப்போர் சங்க காலத்திலேயே வழக்கிýருந்தமையை அறிய முடிகிறது.
இன்றும் சிறிய நகரங்களில், பெரிய கிராமங்களில் சிறுசிறு கத்திகள் கட்டிப் பறவைகளை மோதவிடு கிறார்கள். மேலைநாடுகளில் மிருக, பறவை பாதுகாப்பு இயக்கம் என்றதன் பேரில் இப்போட்டிகளைத் தடை செய்துவிட்டனர். விதி விலக்காக கிரீஸ், இத்தாலி நாடுகளில் மட்டும் நடக்கிறது.

6) சடுகுடு:
இது, தமிழர்களின் விளையாட்டு. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழகத்தில் 'தினத்தந்தி' நாளிதழை நிறுவிய சி.பா.ஆதித்தனார் இவ்விளையாட்டு வளர, பல முயற்சி களை மேற்கொண்டார். 60களில் சடுகுடு வாக இருந்த இவ்விளையாட்டை, இப்போது 'கபடி'யாகத் தமிழ்த் திரைப் படம் அடையாளப்படுத்துகிறது. இது, திராவிட விளையாட்டு. இப்போது, இந்திய விளையாட்டாக மாறிப் போய்விட்டது.

7) தாயம்:
தாயம், இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. உள்ளரங்க விளையாட்டு (ஐய்க்ர்ர்ழ் எஹம்ங்) எனச் சொல்லலாம். பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுவண் காய்களைப் பயன்படுத்தி விளையாடியதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.

8) பல்லாங்குழி:
இது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. தரையில் அல்லது மரப் பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்துநான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணித முறை சார்ந்த விளையாட்டாகும். சிக்கலான இவ்விளையாட்டு, சதுரங்க விளையாட்டுக்குச் சமமாகக் கருதப்படுகின்றது.

9) கிட்டிப்புள்:
இது ஆடவர்களால் ஆடப்படும் வெளி அரங்க (ஞன்ற்ஈர்ர்ழ் எஹம்ங்) விளையாட்டு. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும் சிறிய குச்சியும் பயன்படுகின்றன. கிராமங்களில் பரவலாக இருந்த விளையாட்டு. இதுதான் தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூல வடிவமாகக் கருதப்படுகின்றது. இவ்விளையாட்டை நவீனப்படுத்தினால் உலகப் புகழ்பெற வாய்ப்புண்டு.

10) சிலம்பம்:
சிலம்பத்தை ஒரு கலையாக முதற்சங்க காலம் முதற்கொண்டே மூவேந்தர்கள் ஆதரித்து வந்துள்ளார்கள். திருவிளையாடற்புராணத்தில் சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. வைத்திய நூலான 'பதார்த்த குணசிந்தாமணி'யில் சிலம்பப் பயிற்சி, குதிரைப் பயிற்சி மூலம் ஒருவரின் உடல் வலுவடையுமென்றும் பல நோய்களைத் தீர்க்கும் என்றும் சொல்லப் படுகிறது. சிலம்பாட்டத்தின் முக்கியத்துவம் அதன் அடி (கால்) வரிசையில் இருக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் தனித்தனிப் பெயருண்டு. இவ்வடிவரிசை பரதத்தோடு பொருந்தி வருகிறது.

சிலம்பாட்டம் என்பது கம்பை மட்டும் வைத்து விளையாடுவதல்ல. சுருள்வால், ஈட்டி, கட்டாரி, சங்கிý, மான்கொம்பு வைத்தும் இவ்விளையாட்டை விளையாடலாம். முன்பு போர்ச்சிலம்பம் இருந்தது. அதைப் போருக்கு மட்டும் பயன் படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் கம்பைப் பல விதமாகச் சுழற்றுவது. தீச்சிலம்பம், இரவில் சிலம்புக் கம்புடன் தீப்பந்தம் வைத்து சுழற்றுவது.

வேலூரில் உள்ள ஒரு கோட்டையில் சிலம்பக் கூடம் இருக்கிறது. குறுநில மன்னர்களின் ஆட்சியிலும் சிலம்பம் பரவியிருந்தது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி குன்றியது.

இன்றைக்குச் சிலம்பம் உலக விளையாட்டாகப் பரிணமிக்கிற காலம் வந்து கொண் டிருக்கிறது. அதற்குக் காரணம், மலேசியாவில் இயங்கும் சிலம்பக் கழகம், சிலம்பத்தைக் கலை என்ற வட்டத்தில் இருந்து மீட்டு, விளையாட்டாக மாற்றியதே ஆகும். அவ்வடிப் படையில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் சிலம்பம் அறிமுகமாகியிருக்கிறது. இதே போல் தமிழரின் ஏனைய கலைகளையும் மறு சீரமைத்து விளையாட்டாக மாற்றினால் இன்றைக்கு 40 நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் கலந்துகொள்கிற தமிழர் ஒலிம்பிக் விளையாட்டு நடத்தலாமே!

நன்றி:'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்'-மாத்தளை சோமு

(இக்கட்டுரை இணையம்வழியாக பிரதிபண்ணப்பட்டது)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 

சாளரத்தை மூடு