அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 04   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 06 February 2006

04.

அன்றிரவே சமைப்பதற்காக ஆச்சியிடம் ஒரு முட்டை உடும்பை உரித்துக் கொடுத்துவிட்டு, குளிப்பதற்காகக் கிராமத்தின் ஒரே கிணறான வன்னிச்சியாவயல் கிணற்றடிக்குச் சென்றபோது, அங்கு அப்போதுதான் குளித்து முடித்த நந்தாவதி இடுப்பில் தண்ணீர் தளும்பும் குடத்துடன் நின்றிருந்தாள். சேனாதி வருவதைக் கண்டு அவனுக்காகக் காத்து நின்றாள் நந்தா.

'என்ன சேனா, வேட்டை கிடைச்சுதா?" என அவள் இந்தியத் தமிழின் இனிமை குழைந்த சிங்களக் கன்னி மழலையில் கேட்டபோது சோனாதி அவளைக் கூர்ந்து கவனித்தான். சந்தணச் சவர்க்காரம் போட்டுக் குளித்த அவளுடைய மணம் அந்தக் கிணற்றடியில் மோகனமாக மணத்தது. முழங்காலளவுக்கு மயில் தோகையாய் விரிந்து கிடந்த ஈரக் கருங்கூந்தலின் பின்னணியில் அவளுடைய தங்கமுகம் பளிச்சென்று ஒளிர்ந்தது.

'என்ன சேனா அப்படிப் பாக்கிறீங்க?" அவள் குழந்தையாகக் கேட்டாள்.

பொழுது இருண்டுகொண்டு வரும் அந்தச் சமயத்தில் சேனா காட்டுக்கும் மேலாகத் தெரிந்த கிழக்கு வானைக் கவனித்தான். தங்;கத் தாம்பாளமாக தைமாத முழுநிலவு எழுவது தெரிந்தது.

அவளை மீண்டும் நோக்கிய சேனாதி, 'நந்தா! நிலவுக்கு சிங்களத்திலை என்னண்டு சொல்லுறது?" எனக் கேட்டான். அவனுடைய குரல் சற்றுக் கட்டிக்கொண்டிருந்தது.

'சந்தமாமா!" பட்டென்று பதில் சொன்ன நந்தா சிரித்தாள்.

'இல்லை! நான் சொல்லட்டே?.. நிலவுக்குப் பேர் நந்தா!" என்றான் சேனாதி.

'ஆ.. அப்படியா?" எனக் கலகலவெனச் சிரித்த நந்தாவதி, 'நான் போயிட்டு வாறன்!" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

அவள் அந்த இடத்தைவிட்டு அகன்றபோதும் அவளுடைய செவ்வாழை உடலின் இளமை மணம் இன்னமும் அங்கு நிலவுவதை உணர்ந்த சேனாதி மீண்டும் கிழக்கு வானில் ஒளிர்ந்த முழுநிலவைப் பார்த்தான். அவனை அறியாமலே அவனுடைய உதடுகள் 'நந்தா நீ என் நிலா.. நிலா.." என்ற சினிமாப் பாடலை மெல்ல முணுமுணுத்தன. அந்தப் பாடலை வாய்விட்டு உரத்து அந்தப் பிராந்தியம் முழுவதுமே எதிரொலிக்கப் பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் பிறந்தது. கூடவே, அப்படி வாய்விட்டுப் பாட முடியாதததுபோல் ஒரு தயக்கம் அவனுள் உதிக்கவே, அவன் மௌனமாகக் குளித்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

கல்பகோடி காலமாகவே வாலிபத்தின் வசந்தத்தில் ஜிவராசிகளின் உள்ளுணர்வில் ஏற்படும் ஒர் ஆரம்ப நெகிழ்ச்சி ஏற்பட்டு, அவனுடைய இதயத்தில் முதல் தடவையாக எதுவோ ஒன்று ஊறிச்சுரந்து இன்பமாயும், துன்பமாயும் தோய்த்து எடுத்தது.

அவன் வீட்டிற்குச் சென்றபோது, சிங்கராயர் முற்றத்து வெண்மணலில் தனது நெடிய காலொன்றை மற்றதன்மேல் போட்டவாறே அமர்ந்திருந்தார். நந்தாவதியின் தந்தை குணசேகரா, சீவல்காரக் கந்தசாமி, வற்றாப்பளையிலிருந்து கள்ளுக்காலத்தில் மட்டும் தன் பிறந்த ஊருக்கு வந்துபோகும் அப்பாபிள்ளைக் கிழவன்  ஆகியோருடன் சுவாரஷ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவர் முன்பாக, மணலில் சிறு குழி பறித்துப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த நாலுபோத்தல் கள்ளுமுட்டி இருந்தது. அதில் அரைவாசிக்கு மேல் முடிந்திருந்தது.

அழகாகச் செதுக்கிய பெரிய தேங்காய்ச் சிரட்டை நிறைய, இரையும் பனங்கள்ளை ஊற்றிக் குடித்துவிட்டுச் சுருட்டைப் பற்றிக்கொண்ட சிங்கராயர் தொடர்ந்து பேசவாரம்பித்தார். அவர்கள் இதுவரை அன்று காட்டில் சந்தித்த கலட்டியன் குழுவனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

'என்ன அப்பாபிள்ளை?.. இந்தக் கலட்டியனைப் புடிச்சு சுபாவியாக்கேலாது எண்டு சொல்லுறியோ?.. மனிசன் மனசு வைச்சுச் செய்தால் என்னதான் செய்யேலாது? காட்டு முறுகம் காட்டோடை போகட்டும்! உண்மையாய் அது ஒரு ராசமாடுதான்! அதுதான் வெடிவையாமல் விட்டனான்!.. நல்ல உறுதியான வார்க்கயிறும், அஞ்சாத நெஞ்சுரமும் இருந்தால் ஏன் இந்தக் கலட்டியனைப் புடிக்கேலாது!" சிங்கராயரின் குரல் அதிர்ந்தது.

'என்ன இருந்தாலும் சிங்கராயர்.. ஆனைப்பாகனுக்கு ஆனையாலைதான் சா எண்டதுபோலை குழுமாடு புடிக்கிறவனுக்கு குழுமாட்டாலைதான் சா!.. போனவரியம் முள்ளியவளையிலை குழுமாடு புடிக்கிற காடேறி காத்தி குழுமாடு வெட்டித்தானே செத்தவன்!" என அப்பாபிள்ளைக் கிழவன் சொன்னபோது அதை மறுப்பதுபோல் அட்டகாசமாகச் சிரித்தார் சிங்கராயர்.

'உது விசர்க்கதை அப்பாபிள்ளை!.. அவன் கொண்டுபோன வார்க்கயிறு நைஞ்சிருக்கும், இல்லாட்டி அவன் ஏதோ கவனக் குறைவாய்ப் போயிருக்கவேணும்!.. அதுதான் குழுவனுக்கு காலுக்குப் படுத்த வார்க்கயிறு அறுந்து குழுவன் ஆளை வெட்டியிருக்குது!"

இவர்களுடைய சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த நந்தாவதியின் தந்தை குணசேகரா, சிங்கராயர் அன்றைய கலட்டியனைப் பற்றிக் கூறியதைக் கேட்டு ஏற்கெனவே அரண்டிருந்தான். தானும் தன் சகாக்களும் தொழில்புரியும் காடுகளில் இப்படி ஒரு பயங்கர மிருகம் உலவுவது அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது. இப்போது சிங்கராயர் கூறியதைக் கேட்கையில் அவரைப் பற்றிய அபிமானம் அவன் மனதில் இன்னமும் அதிகமாகி விட்டிருந்தது. அவன் தன் மனதில் எழுந்ததை அப்படியே அவரிடம் கேட்டான்.

'சிங்கராஜ ஐயா! ஒங்களுக்குப் பயங் இல்லையா?"

காடடித்த களைப்பில் மால் திண்ணையில் மான்தோலைப் போட்டுக்கொண்டு படுத்திருந்த சேனாதி, குணசேகராவின் கேள்விக்குத் தன் பாட்டன் என்ன பதில் சொல்வார் என்ற ஆவலுடன் திரும்பிக் குப்புறப் படுத்து கைகள் இரண்டினாலும் முகத்தைத் தாங்கிய வண்ணமே அவர்களைக் கவனித்தான்.

சிங்கராயர் சிரட்டையில் வாய்வைத்துக் கள்ளைக் குடித்துக் கொண்டிருந்த சமயத்தில் குணசேகரா திடீரெனக் கேட்டபோதும், சாவாதனமாகக் கள்ளைச் சுவைத்துக் குடித்துவிட்டு உதட்டைத் துடைத்துக்கொண்டு குணசேகiராவை திரும்பிப் பார்த்தார் சிங்கராயர்.

'என்ன பயமோ?.." எனக் கேட்டுவிட்டுக் கடகடவெனச் சிரித்தார் சிங்கராயர். 'எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலையிருந்து நான் ஒண்டுக்கும் பயப்பிட்டது கிடையாது குணசேகரா!.. அந்த நாளையிலை சனங்கள் என்னத்துக்குப் பயப்பிட்டுதுகள்?.. பேய்க்குப் பயந்தாங்கள்!.. நோய்க்குப் பயந்தாங்கள்!.. பேய் எண்ட ஒண்டு இருக்கெண்டே நான் நம்பாதவன்!.. அப்பிடியிருந்தால் பேய்தான் எனக்குப் பயப்பிடோணும்!... நோய் எண்டதை நான் இண்டைவரை அனுபவிச்சதே கிடையாது!.... அதுக்கும் பயமில்லை!... வேறை என்னத்துக்கு நான் பயப்பிடோணும்?... முறுகசாதிக்கோ?... காட்டுமுறுகம் காட்டோடை இருக்கும். நாங்கள் காட்டுக்குப் போனால் ஏலுமான அளவுக்கு அதுகளை விலத்திப் போகோணும்! காட்டுமுறுகம் ஊருக்கை வந்தால் அதைப் புடிச்சு மடக்கிப் பழக்கி அதின்ரை குணத்தை மாத்திச் சுபாவியாக்க வேணும்! அப்பிடிச் செய்யேக்கை எங்கடை உயிர் போனாலும் பறுவாயில்லை!... நானே உயிருக்குப் பயந்து ஒதுங்கினால், நாளைக்கு என்ரை மோனோ, பேரனோ அவங்களும் பயந்து பயந்து சாவாங்களே ஒழியச் சந்தோஷமாய் சீவக்கமாட்டாங்கள்!"

சோனாதிக்கு சிங்கராயர் இப்போது கூறியதைக் கேட்கையில், தனது கல்லூரியில் அதிபராக இருக்கும் கே.பானுதேவன் அடிக்கடி வகுப்புக்களில் சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

'... இந்த நாட்டிலே வாழும் மக்களில் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களின் தொகையே அதிகம். கள்ளங் கபடமற்ற இந்த வாலிப உள்ளங்கள்தான் வளமான பூமி! இந்த வயதில்தான் நீங்கள் யாவரும் உங்கள் உள்ளங்களிலே உன்னதமான இலட்சியங்களை விதைத்து, அந்த இலட்சியப் பயிரைக் கண்ணுங்கருத்துமாகக் கவனித்துப் பேணி வளர்க்கவேண்டும்! பொறாமை, கல்மிஷம் போன்ற நோய்கள் தொற்றாவண்ணமும், கீழ்த்தரமான எண்ணங்களான களைகள் வளர்ந்து அந்த இலட்சியப் பயிரை நெருக்கிப் போடாதபடிக்கும் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்!"

... உன்னதமானவற்றை வாசியுங்கள். உன்னதமானவற்றைச் சிந்தித்து, பேசி, உன்னதாமானவற்றையே செய்யுங்கள். சந்தேகம் அப்பயிரை விளையும் வேளையில் மேய்ந்துவிடாது கவனமாக இருங்கள். அப்போதுதான் உங்கள் இலட்சியப்பயிர் வளர்ந்து, உங்களுக்கும் நீங்கள் வாழ்கின்ற சமுதாயத்துக்கும் உதவும் கனிகளைத் தரும். அச்சமின்றி உன்னதமானவற்றைச் செய்ய விழையுங்கள்! இன்றைய எமக்கு வழிகாட்டிகளாகத் திகழும் அன்றைய பெரியோர்கள் யாவரும் உன்னதமான இலட்சியங்களுக்காகத் தமது உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள்தான்! இயேசு, காந்தி, லிங்கன், லுமும்பா என்று இப்படி பலநூறு உதாரண புருஷர்களை உங்களுக்குத் தெரியும்....."

எம். ஏ பட்டதாரியான கே. பானுதேவனின் கருத்துக்களுக்கும், அரிவரிகூடப் படிக்காத தனது பாட்டன் சிங்கராயரின் இப்போதைய கூற்றுக்கும் இருந்த ஒற்றுமை, சேனாதியின் மனதில் சிங்கராயரை மேலும் உயர்த்தியது. அவன் மறுபடியும் அவர்களுடைய சம்பாஷணையைக் காதுகொடுத்துக் கவனித்தான்.

'அப்பாபிள்ளை!... பயம் எண்டதே மனிசனுக்கு இருக்கக்கூடாது!... நீயும் உன்ரை சொந்தக்காறரும் இஞ்சை முந்தி ஆண்டாங்குளத்திலைதானே இருந்தனீங்கள்?.. இஞ்சை காட்டுக்கும், முறுகசாதிக்கும், நோய்க்கும் பயந்து இப்ப இருக்கிற இடங்களுக்குப் போனியள்!.. ஆருக்குமோ இல்லை எதுக்குமோ பயந்து ஒருநாளும் நிரந்தரமாய் உங்கடை இடத்தை விட்டிட்டுப் போகக்கூடாது! இஞ்சை விட்டிட்டுப் போனியள்... இப்ப அங்கை உங்களுக்குப் புதுமாதிரிப் பயங்கள்! பக்கத்து வீட்டுக்காறன் என்ன சொல்லுவானோ, இல்லை உங்கடை சாமானைக் களவெடுத்துப் போடுவானோ எண்டு ஆளுக்காள் பயம்!.. ஆமிக்காறருக்குப் பயம்!.. சாகிறது ஒருநாளைக்குச் சாகிறதுதானே அப்பாபிள்ளை!.. பிறகென்ன மசிருக்கே பயப்பிடவேணும்!" எனச் சிம்மக் குரலில் முழங்கிக் கொண்டிருந்தார் சிங்கராயர்.

அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருந்த சேனாதி, பகல் முழுவதும் காட்டில் அலைந்த களைப்பில் அப்படியே உறங்கிப் போனான்.

(வளரும்)


     இதுவரை:  24715177 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4332 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com