அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 21 January 2006

02.
த
ண்ணீரூற்றில் இருந்து காலை ஆறுமணிக்குப் புறப்பட்ட பஸ், குமுளமுனை மலைவேம்புச் சந்தியை ஆறரை மணிபோல் வந்தடைந்தபோது, சோனாதிராஜன் இறங்கிக்கொண்டான்.
குமுளமுனைக்குக் கிழக்கே விரிந்து கிடந்த பரவைக் கடலுக்கும் அப்பால், அவனுடைய தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் குக்கிராமத்துப் பனைகளின் தலைகள் தொலைவிலே தெரிந்தன.
செல்வன் ஓவசியர் வாயில் வேப்பங்குச்சியுடன் வயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். சோனாதிராஜனைக் கண்டதுமே, 'என்ன மருகனே ஆண்டாங்குளத்திற்கா பயணம்? அடியேன் உமது பேரன் சிங்கராயரை மிகவும் விசாரித்ததாகக் கூறும்! நல்ல வெய்யில் வீழ்ந்து நீவீர் உடும்பு வேட்டையாடினால் என்னையும் மறந்துவிடாது இருக்கும்படி கூறும்! யான் செல்கின்றேன்!" எனச் சொல்லிவிட்டுப் போனார் செல்வன் ஓவசியர்.
செல்வன் ஓவசியர் மிகவும் தமாஷான பேர்வழி! அவர் இலக்கண சுத்தமாகவும், அதேசமயம் நையாண்டியாகவும் பேசுகையில் மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.
சென்றவருடம் இதேபோன்று ஒரு தை மாதத்திலே அவர் ஆண்டாங்குளத்துக்குப் பனங்கள் குடிப்பதற்காக வந்திருந்தார். காலைப் பனங்கள் என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை! சீவல்காரக் கந்தசாமியைக் கையில் முட்டியுடன் கண்டதுமே அவர் சினிமாப் பாணியில், 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்!" என அட்டகாசமாகப் பாடினார். கந்தசாமி கள்ளுச் சீவ ஆரம்பித்துச் சிலநாட்களே சென்றிருந்தன. 'இன்னும் அஞ்சாறு நாள் போகவேணும் ஓவசியர்!" என்றதுமே, ஓவசியர் சட்டென்று, ''ஆ.. ஐந்தாறு நாட்கள் போகட்டும்!" என்ற சினிமாப் பாடலைத் தொடர்ந்து பாடி ஆர்ப்பாட்டமாகச் சிரித்து மகிழ்ந்ததை, ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்த சேனாதிராஜன் இப்போதும் நினைத்துச் சிரித்தான்.
பரவைக் கடலை அடைந்ததும் சேனாதிராஜன் நடப்பதற்கு வசதியாகச் சாறத்தை உயர்த்தி மடித்துக் கட்டிக்கொண்டு, கையில் கொண்டுவந்த பன்பையைத் தோளில் ஏற்றிக்கொண்டான்.
அவனுக்குப் பதினாறுவயது இளங்குமரப் பருவம். தாய்வழிப் பாட்டனாகிய சிங்கராயரின் உடல்வாகைக் கொண்டிருந்த அவன், கம்பீரம் மிக்க காளையாக நடைபோட்டான்.
சிங்கராயரைப் பார்ப்பவர் யாரும் அவருக்கு வயசு அறுபத்தைந்துக்கும் மேல் என்று சொல்லவே மாட்டார்கள். கருங்காலி வைரம் போன்ற நெடிய உடல்வாகு. தலையில் கருகருவென்ற கட்டுக்குடுமி. இப்போதும் ஒரு முழுக்கொட்டைப் பாக்கைக் கொடுப்பினுள் வைத்து மடுக்கெனக் கடிக்கும் பல்வன்மை.
அவருடைய இளைய பதிப்பாகிய சேனாதிராஜன், பரவைக் கடலினூடாக ஆண்டாங்குளம் செல்லும் ஒற்றையடிப் பாதையில் தரித்து, அந்த அழகிய சுற்றாடலை நோக்கினான்.
தைமாதப் பனி இன்னம் முழுதாக அகன்றிருக்கவில்லை. ஆண்டாங்குளத்துக்கு மேலே வெகுதூரம், இப்போது சிங்களக் கிராமமாய் ஆகிப்போன பதவியாவரை, வியாபித்திருந்த காட்டை வருடிவந்த காலையிளங்காற்று அவனுடைய முகத்தில் மோதியது.
கிழக்கே எழுந்த இளஞ்சூரியனின் கதிர்கள் அச் சூழலையே பொன்னிறமாக அடித்துக் கொண்டிருந்தது.
மூலிகைகளின் சுகந்தம், கடல்நீரின் வாசம், பனியின் சீதளம், இவையனைத்தும் கலந்த காற்றை நெஞ்சார இழுத்துச் சுவாசித்த சேனாதிராஜனின் உடலெங்கும் புத்துணர்வு பாய்ந்தது. அவனுடைய இளநெஞ்சம் எம்பித் துள்ளியது.
'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக" என உற்சாகமாக வாய்விட்டுப் பாடியபடியே நடந்தான் சோனாதிராஜன். சினிமாப் பாடல்கள் என்றாலே அவனுக்குக் கொள்ளை ஆசை. இனிய குரல்வளமும், கம்பீரமான சாரீரமும் கொண்ட சேனாதிராஜன், தனக்குப் பிடித்த பாடல்களை இரசித்துப் பாடிக்கொள்வான். முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அவனுக்கு, சனிஞாயிறு வந்துவிட்டாலே உற்சாகம் கரைபுரளும். அவனுடைய தாய் கண்ணம்மா, ஆண்டாங்குளத்திலே வசிக்கும் தனது பெற்றோருக்கு, மகன் சேனாதி மூலமாகத் தேவையான பொருட்களை அனுப்பி வைப்பாள்.
இந்த முதிர்வயதிலும் அவர்கள் அந்தச் சின்னஞ்சிறு காட்டுக் கிராமத்தில் தனியே வசிப்பது அவளுடைய மனதுக்கு மிகவும் கஷடத்தைக் கொடுத்தது. அவர்களுடைய ஒரே பிள்ளையான அவள், தன் கணவனுடைய கிராமமாகிய தண்ணீரூற்றில் வாழ்ந்து வந்தாள். அவளும் அவளுடைய புருஷன் சுப்பிரமணியமும் எவ்வளவோ வற்புறுத்தியும், சிங்கராயர் ஆண்டாங்குளத்தை விட்டு வரவிரும்பவில்லை. பிறந்த மண்ணிலும், அவருடைய கறவையினத்திலும் அவருக்கு அத்தனை பிடிப்பும், பாசமும் இருந்தன. எனவே தன் மகன்மூலம், சனிஞாயிறில் அந்தத் தம்பதிகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அனுப்புவதில் ஆறுதல் கண்டாள் கண்ணம்மா.
சேனாதிராஜனின் வருகை கண்டு கடலில் மேய்ந்துகொண்டிருந்த சிறகைக்கூட்டம் ஜிவ்வென்ற இரைச்சலுடன் மேலெழுந்து ஆண்டாங்குளத்தை நோக்கிப் பறந்தன.
அவன் அரையளவு ஆழமும், ஏறத்தாழ அறுபது யார் அகலமுமாகக் கிடந்த முதலாவது ஆற்றை அடைந்தபோது, அங்கு வள்ளக்காரக் கயிலாயரைக் காணவில்லை.
பொருட்கள் நிறைந்த பையைத் தரையில் வைத்துவிட்டு, கையிரண்டையும் வாயருகே வைத்துக் குவித்து, 'ஓ..ஹோ...." என நீட்டிக் குரல் கொடுத்தான் சோனாதிராஜன்.
பாதையின் கடைசியில் இருந்த நித்தகை ஆற்றையும், சேனாதிராஜன் நின்றிருந்த தண்ணிமுறிப்பு ஆற்றையும் இணைக்கும் சிற்றாறுப் பக்கமாகக் கயிலாயரின் பதில் குரல் கேட்டது.
கரையெங்கும் காடாய் மண்டிக்கிடந்த காட்டுப் பூவரசுகள் உதிர்த்த மலர்கள், மஞ்சளும் சிவப்புமாய் ஆற்றில் மிதந்தன. அவற்றை விலக்கிக்கொண்டு வள்ளம் கரைக்கு வரமுன்னரே தண்ணீரில் இறங்கி வள்ளத்தில் தொத்திக் கொண்டான் சேனாதிராஜன்.
நெற்றி நிறைய ஐயன்கோவில் திருநீறும், வாய் நிறையச் சிரிப்புமாக வரவேற்றார் கயிலாயர். பையை வள்ளத்தினுள் வைத்துவிட்டுக் கயிலாயரிடமிருந்து கம்பை வாங்கி இலாவகமாக வள்ளத்தைத் திருப்பினான் சேனாதிராஜன்.
'இண்டைக்குச் சனிக்கிழமை, கட்டாயம் நீ வருவாய் எண்டு நந்தாவதி சொன்னவள்"  ஆசுவாசமாக அமர்ந்துகொண்ட கயிலாயர் சொன்னார்.
'நந்தாவோ!?.. எப்ப வந்தவள்?" ஒருகணம் கம்பு ஊன்றுவதை நிறுத்திய சேனாதிராஜன் வியப்புடன் கேட்டான்.
'அவள் அங்கை கண்டியிலை மாமன் மாமியோடை நிக்கப் புறியமில்லை எண்டு தேப்பனோடை புதன்கிழமை வந்திட்டாள்.. .. என்ன இருந்தாலும் சொந்தத் தாயிருக்கிறதுபோலை வருமே!"
தொடர்ந்து கம்பையூன்றி வள்ளத்தைச் செலுத்திய சேனாதிராஜன் நந்தாவை நினைத்துக் கொண்டான்.

தொடரும்...

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


     இதுவரை:  24782070 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5752 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com