அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 19 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வாசகர்களுடன்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாசகர்களுடன்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 12 January 2006

எனது நான்காவது நாவலான வட்டம்பூவை வீரகேசரி பதிப்பகத்தாரிடம் வெளியிடுவதற்காகக் கொடுத்திருந்தேன். 1977ம் ஆண்டு இலங்கையில் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு தமிழர் அழிப்பு, திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்தின் பன்முகப்பட்ட அடக்குமுறையாலும், ஆக்கிரமிப்பினாலும் தமிழ் மாணவர்கள் மிகவும் கொதித்துப் போயிருந்தனர். ஆயுதம் ஏந்தினால் மட்டுமே தமிழினம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்மானத்துடன் வாழவும், இழந்த தமது உரிமைகளை மீளப்பெறவும் முடியும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. எனது நாவல் இந்த விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் வீரகேசரியினர் இந்த நாவலை வெளியிட விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் இந்த நாவலை வெளியிடலாம் என்ற எண்ணம் அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால் நாவலின் கையெழுத்துப் பிரதியை விமான நிலையத்தினூடாக எடுத்துச் செல்வதில் ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தினால், சென்னைக்குச் சென்று அங்கேயே நாவலை எழுதி, யாராவது பதிப்பாளரிடம் கொடுத்துப் பதிப்பித்து, அதற்குப் பணமும் பெற்றுக்கொள்ளலாம் என எண்ணும் அளவுக்கு, எனது எழுத்துத் திறமையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டு கழிந்துள்ள இன்றைய நிலையில் எனது அப்பாவித்தனமான முட்டாள்தனத்தை நினைக்கையில் எனக்குச் சிரிப்பாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. 

1982 மார்கழி மாதம் சென்னை சென்று கோடம்பாக்கத்தில் நண்பரொருவர் வீட்டில் தங்கி எழுத ஆரம்பித்தேன். நான் தங்கியிருந்த அறையில் பாய் மட்டுமே இருந்தது. தரையில் அமர்ந்து, முழங்காலில் ஒரு மட்டையை வைத்து எழுதுவது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். போதாக்குறைக்கு, வயலில் நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொட்டாச்சிணுங்கி முள் கிழித்த காயம், மார்கழி மழைக்கால ஈரத்தில் வலியெடுக்க ஆரம்பித்து இலேசாகக் காய்ச்சலும் இருந்தது.

மனதிலே மட்டும் காவி வந்த கதையை, அடித்தல் திருத்தல் இன்றி, இரண்டு நாட்களில் எழுதி முடித்திருந்தேன். 150 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை, இரண்டு நாட்கள் அவகாசத்தில் ஒரு பரீட்சை எழுதியது போன்று எழுதிய அனுபவம்! பக்கத்துப் பிளாட்டில் இருந்த வானொலியில், அச்சமயம் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துகொண்டிருந்த ரெஸ்ற் கிரிக்கெட் ஆட்டத்தில், கவாஸ்கர் 300 ஓட்டங்கள் எடுத்துச் உலகசாதனை புரிந்துகொண்டிருப்பதைக் கேட்கக்கூடியதாகவும் இருந்தது.

மூன்றாம்நாள் நர்மதா பதிப்பகத்துக்கு நாவலை எடுத்துச் சென்றேன். உரிமையாளர் இராமலிங்கம், அப்போதிருந்த சூழ்நிலையில், என்போன்ற அறிமுகமில்லாத எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிடுவதற்கு வாய்ப்பு இல்லையென்று அறுதியாகக் கூறிவிட்டார். நான் ஈழத்திலிருந்து பெரும் நம்பிக்கையுடன் வந்து, இதனை இரண்டு நாட்களில் எழுதியிருக்கின்றேன். ஒரு தடவை மேலோட்டமாக எனினும் படித்துப் பாருங்களேன் என நான் கேட்டதற்கு இணங்க அவர் கையெழுத்தப் பிதிதியை வாங்கி வைத்துக் கொண்டார்.

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் திநகரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதுமே ஆரத்தழுவிக்கொண்ட இராமலிங்கத்தார் கூறியதைக் கேட்டபோது எனது இதயம் பூரித்தது. கடந்த இரவு அவர் படுக்கைக்குச் செல்கையில் ஏனோதானோ என்று நாவலைப் படிக்க ஆரம்பித்திருந்தாராம். ஒரு சில பக்கங்கள் படித்ததும் அதை முழுவதுமாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம். முழுவதுமாகப் படித்து முடித்தபின்னரே நித்திரைக்குச் சென்றாராம். 'இது ஒரு சிறந்த நாவல். யுனிவேசல் தீம்!" என அவர் புகழ்ந்து பாராட்டியபோது எனக்கு உச்சி குளிர்ந்தே போய்விட்டது! ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது என்னால் இதனைப் பதிப்பிக்க முடியாது, வசதி வரும்போது பார்க்கலாம், நாவல் என்னிடமே இருக்கட்டும் என வாங்கி வைத்துக் கொண்டார். தனது இல்லத்தினுள்ளே அழைத்து, அவரும் அவரது பாரியாரும் எனக்கு காலையுணவு அளித்து மிகவும் அன்பாக உபசரித்ததை என்னால் எப்போதுமே மறக்கமுடியாது.

ஆனால் இராமலிங்கத்தார் குறிப்பிட்ட அந்த வசதி வரவேயில்லை.                    

1985ல் எனது நண்பரொருவர் நாவலின் கையயெழுத்துப் பிரதியை அவரிடமிருந்து பெற்று, சோமு புத்தகநிலையத்தின் அதிபரான இராமையா அவர்களிடம் தந்து, அதைப் பதிப்பிக்க உதவியிருந்தார். ஆனால், வட்டம்பூ என்ற பெயருக்குப் பதிலாக நந்தாவதி என்ற பெயர் தாங்கியே இந்த நாவல் வெளிவந்தது. இது எனக்குத் தெரியாமல் நிகழ்ந்த சம்பவம். பின்னர் இந்த நாவல் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்று, தமிழ்நாட்டின் நூலகங்களில் இடம்பெற்றதாக அறிந்தேன். முகந்தெரியாத எழுத்தாளனான எனது நாவலைப் பெருமனதுடன் பதிப்பித்த பதிப்பாசிரியர் திரு.லெ. இராமையாவுக்கு நான் என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அவர் இந்தக் கதைக்கு 1985 ல் எழுதிய பதிப்புரையை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.

'ஈழநாட்டின் வளங்களையும், மக்கள் வாழ்க்கை முறைகளையும் சித்திரமாக்குவதில் தலைசிறந்தவர் இந்த நாவலாசிரியர் திரு. அ. பாலமனோகரன் அவர்கள்.

தற்கால ஈழநாட்டுச் சூழ்நிலையில் இனக்கலவரங்களும் அதன்வழி மக்கள் பாதிக்கப் படுகின்றதையும் இந்த நாவலில் சுட்டிக் காட்டுகின்றார் ஆசிரியர்.

ஈழத்தின் வன்னிப்பிரதேச மண்வாசனைக்குள் நாவலைக் குழைத்து நாவலின் பிறிதொரு ஊடகமாக பின்னணியில் சொல்லி, இறுதி வெற்றி மக்களுக்கே என்ற முடிவோடு  à®¨à®¾à®µà®²à¯ˆ நிறைவு செய்கின்றார்.

ஒரு சிங்களப் பெண்ணும், ஒரு தமிழ் இளைஞனும். இதன் பின்னணியில் இனக்கலவர நிகழ்ச்சிகள் ஓடுகின்றன. இதற்குள் இந்தப் பாத்திரங்கள் கலங்கி நிற்கின்றன.

குழுமாடுகளை அடக்குவதாக சித்தரிக்கும் இந்த நாவலாசிரியரின் பார்வை அவை வெறும் குழுமாடுகளைக் குறிக்கவில்லை என்பதை நாவலைப் படிப்பவர்கள் இலகுவில் கண்டுகொள்வார்கள்.

அசல் கிராமத்து மக்கள் இந்த இனவாதங்களுக்குள் இருந்து விடுபட்டு தமது உயிர்ப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்களா? இல்லையா? நாவலைப் படித்துப் பார்த்தால்  à®ªà¯à®°à®¿à®¨à¯à®¤à¯à®ªà¯‹à®•à¯à®®à¯."

      à®²à¯†.இராமையா

இந்த நாவலை ஈழத்திலுள்ள வாசகர்களில் 99 வீதமானோர் படிக்கவேயில்லை. இந்தக் குறையை அப்பால்தமிழ் தீர்த்து வைக்கும் என எண்ணுகின்றன்.

நிலக்கிளியைப் போன்றே இந்தக் கதையும் வன்னி மண்ணையும், அங்கு வாழ்ந்த மக்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நிலக்கிளியைவிட இன்னுமதிகமானதும், வித்தியாசமானதுமான சங்கதிகளைச் சொல்கின்றது. குழுமாடு பிடிக்கும் கலையும், அதற்காகத் தயாரிக்கப்படுகின்ற 'வார்க்கயிறு" போன்றவையும், இன்றைய வன்னியில் இல்லையென்று கூறலாம். அதேபோன்று அன்று வன்னியில் வாழ்ந்த மக்களின் தனித்துவமான குணாதிசயங்களையும் இன்று வன்னி மக்களில் காண்பது மிக அரிதாகவே உள்ளது.

இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் பலர் உண்மையானவர்கள்தான். நந்தாவதியும், அவள் தந்தையான குணசேகராவும் கற்பனைப் பாத்திரங்கள். இதை எனது பிரதேச மக்கள் இலகுவாகக் கண்டுகொள்வர்கள்.

வட்டம்பூ என்ற மூலப்பெயரிலேயே இந்தக் கதை இணையத் தளத்தில் வெளியாவது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. நிலக்கிளி நாவலை வீரகேசரி தாபனம் பதிப்பிக்க முன்வந்தபோது, அதன் பெயரை மாற்றவேண்டுமென்று கேட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. நாவல் பதிப்பிக்கப்படாது போயினும், நிலக்கிளி என்ற பெயரை மாற்றுவதற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று நான் உறுதியாகக் கூறியிருந்தேன். நல்ல காலம்! எஸ் பாலச்சந்திரன் எனது எண்ணத்துக்கு இணங்கி வந்திருந்தார்.

வீரகேசரி தாபனம் நிலக்கிளியை அக்காலம் பிரசுரிக்க முன்வராதிருந்தால், இன்று நிலக்கிளி நாவலும் தொலைந்து போயிருக்கும், நானும் பெயரில்லாது வாழ்ந்திருக்கக்கூடும்! அதற்காக இன்றும் நான் வீரகேசரி தாபனத்துக்குக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்நாட்களில் ஒரு சாதாரண, வசதியற்ற எழுத்தாளன் தனது நாவலைப் பதிப்பித்து, வெளியிட்டு, வினியோகமும் செய்வதானால் அவன் பெரும் இழப்புக்களைச் சந்திக்க நேரிடுவதுண்டு.

இந்த நாவலை நான் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்த முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின், பல்கலைக்கழக புகுமுகு வகுப்பில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று அங்கு மாணவர் தலைவனாகவும் திகழ்ந்தான். அவனுடைய விழிகளின் ஒளி, சிறுமைகண்டு பொங்கும் இயல்பு, ஒரு நாளைக்குள் உலகைத் திருத்திவிட முயலும் உணாச்சிக் கொந்தளிப்பு என்பனவற்றைத்தான் இக்கதையில் காந்தி என்ற பாத்திரத்தில் கொண்டுவர முயன்றேன். கதையின்படி அவன் தனது இலட்சியத்தை அடைவதற்காக தாயைவிட்டு, ஊரைவிட்டு மறைந்தே போகின்றான். அவன் தன் போராட்டப் பாதையில் நிச்சயம் வெற்றி பெறுவான், தன்னைப்போன்று ஆயிரமாயிரம் இளந்தமிழர்களை உருவாக்குவான் என எண்ணியிருந்தேன்.

நிச்சயமாக அவன் தன் பணியைச் செவ்வனே செய்திருந்தான். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவனும் இன்று எம் மண்ணுக்காக உயிர்தந்த ஆயிரமாயிரம் மாவீரர்களில் ஒருவனாகிவிட்டான். குமுளமுனைக் கிராமத்தில் உதித்து, உதிர்ந்து, இன்று வானத்து நட்சத்திரங்களுள் ஆகிவிட்ட இளைஞர்களில் அவனும் ஒருவன்.

மாணவசக்தி என்பது மிகவும் வலிமையானது. குழந்தைப் பாராயத்தில் தெய்வங்களாகவே இருந்தவர்கள், வாலிபவயதில் உலகாயுதம் சற்றுக் கலந்து, தேவ, தேவியராக ஆகின்றனர். இந்த அற்புதக் குமரப்பருவத்தில் அவர்கள் பிறருக்காகத் தமது உயிரையே அளிக்கத் தயாராக இருக்கின்றனர். இவர்களது குற்றமற்ற இரத்தத்தின் அர்ப்பணிப்பில்தான் உன்னத இலட்சியங்கள் நிறைவேறுகின்றன. இளகிய பசுந்தங்கம் இறுகிய வைரமாவதும் இந்தப் பருவத்தில்தான். இந்தப் பருவம் கடந்தபின் அவர்களை உலகம் முழுவதுமாக ஆட்கொண்டுவிடுகின்றது. அப்போது அவர்கள் வெறும் மனிதர்களாக ஆகின்றனர். சுயநலம் அவர்களை இவ்வாறு மாற்றிவிடுகின்றது. இது தவிர்க்கமுடியாத பரிணாம மாற்றங்கள். ஆனால் தமது மனத்தூய்மை;, வைராக்கியம் என்பன காரணமாக மனித நிலையிலிருந்து மாமனிதர்களானவர்களும் உண்டு. அதையும் கடந்த நிலையில், மாந்தருக்குள் தெய்வங்களாக வாழ்ந்தவர்களும் உண்டு.

இன்று ஈழத்தில் மாணவர்களின் உணர்வுகள் மிகவும் கொந்தளித்த நிலையில் இருக்கக் காண்கின்றோம். அன்று, மாணவசக்தியின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட அத்திவாரங்களில்தான் இன்றைய ஈழம் எழுந்து நிற்கின்றது. நாளை ஈழம் மகுடம் சூட்டிக்கொள்ளப் போவதற்கு ஆதாரசக்தியாக இருக்கப்போவதும் மாணவர் சக்திதான்!

வட்டம்பூ கதையிலும் இந்த மாணவ சந்ததியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தி என்ற மாணவன் வந்த போகின்றான். அவனைப் போன்று எமது மண்ணிற்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த புண்ணியர்களில் அவனும் ஒருவன்.

இக் கதையை எழுதிய காலத்தில் எனக்கிருந்த அறிவு, அனுபவம் என்ற வரையறைகளுள்தான் இந்தப் படைப்புக் கட்டுப்பட்டு நிற்கின்றது. எனவே அவற்றையொட்டிய குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆயினும், அந்தக் கால வன்னி மண்ணையும், மக்களையும் இந்தக் கதை நிச்சயம் இன்று நம் கண்முன் நிறுத்தும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

வன்னி மண்ணைத் தளமாகக்கொண்டு; உருவாகிய 'வட்டம்பூ" என்ற எனது நாவலைத் தொடர்கதையாக அப்பால்தமிழில் வெளியிடுவதற்கு மனமுவந்து இடமளித்த கி.பி.அரவிந்தனுக்கும்; அப்பால்தமிழ் குழுமத்துக்கும் முதலில் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதோ உங்கள் பார்வைக்கு வட்டம்பூவைச் சமர்ப்பிக்கின்றேன்!

பணிவன்புடன்

நிலக்கிளி பாலமனோகரன்
டென்மார்க்
14.01.2006

balamanoharan@get2net.dk

 


மேலும் சில...
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 19 Mar 2024 09:51
TamilNet
HASH(0x5588c07fe928)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 19 Mar 2024 09:51


புதினம்
Tue, 19 Mar 2024 09:51
















     இதுவரை:  24681881 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1234 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com