அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் -31-32   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 06 August 2005

31.

சுந்தரலிங்கம் இரண்டாவது தடவையாகக் கதிராமனுடைய வளவுக்குச் சென்றபோது அறுவடை முடிந்திருந்தது. சாயங்கால நேரம், நெற்கதிர்களைச் சூடு வைப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.

சுந்தரம் அங்குபோய், அவர்களுடைய வேலையில் பங்குகொள்ள முயன்றபோது, 'என்ன வாத்தியார், நீங்கள் இந்த வேலையெல்லாம் செய்யிறதே!... பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ.... நாங்கள் செய்வம்!' என்று கதிராமன் அவனைத் தடுத்தான். சுந்தரத்திற்கு வயல் வேலைகளைச் செய்து பழக்கமில்லை. அவன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவனுடைய படிப்புக் கெட்டுவிடுமென அவனுடைய தகப்பனார் அவனை எந்த வேலைக்கும் அழைப்பதில்லை. இருப்பினும் சுந்தரம், கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து செய்த அந்த வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான்.

வெட்டிய கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கயிற்றினால் கட்டி அதைப் பதஞ்சலியின் தலையில் ஏற்றிவிடுவான் சுந்தரம். அவள் தன் கைகளை உயர்த்தித் தலையிலிருக்கும் கதிர்க்கட்டைப் பிடித்தவாறே சூட்டுக்களத்தை நோக்கி நடக்கையில், செப்புச் சிலையொன்று உயிர்பெற்று நடப்பதைப் போன்றிருக்கும். மாவக்கைகளைச் சேர்த்து வைக்கும்போதும், கதிர்க்கட்டைத் தலைக்குத் தூக்கிவிடும்போதும், இடையிடையே பதஞ்சலியினுடைய விரல்களின் ஸ்பரிசம் அவனுக்குக் கிட்டியது. அவளுடைய களங்கமற்ற முகத்தில் ததும்பிய அழகும், ஆரோக்கியமும் சுந்தரத்தினுடைய வாலிப உணர்வுகளையெல்லாம் மீட்டி நாதம் இசைக்கச் செய்துகொண்டிருந்தன.

பொழுது சாய்ந்துவிட்டபோது, சூடுவைக்கும் வேலை முடிந்த திருப்தி நிறைந்த உள்ளங்களுடன் அவர்கள் குடிசைக்குச் சென்றார்கள். கதிராமனும் சுந்தரமும் வாய்க்காலில் இறங்கிக் குளித்துவிட்டு வருவதற்கிடையில், பதஞ்சலி கிணற்றில் குளித்துவிட்டு, சுடச்சுட தேநீரை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் மினுக்கிவிட்ட குத்துவிளக்கைப் போன்று பளிச்சென்றிருந்தது. பகல் முழுவதும் வயலில் கடுமையாக உழைத்திருந்தாலும் பதஞ்சலியின் உடலில் சோர்வென்பதே இல்லை. குசினிக்கு முன்னால் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்துகொண்டு இரவுச் சமையலுக்கான ஏற்பாடுகளை மளமளவென்று செய்த பதஞ்சலி, முற்றத்தில் அமர்ந்திருந்த கதிராமன், சுந்தரம் ஆகியோரின் சம்பாஷணையில் உற்சாகமாகக் கலந்துகொண்டாள்.

காட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலைப் பாகற்காயோடு, இறைச்சிக்கருவாடு, கொச்சிக்காய் சேர்த்துப் பதஞ்சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும், வேலைசெய்து களைத்துப் போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித்தது. தண்ணிமுறிப்புக்கு வந்த நாள்தொட்டு, அவன் தானேதான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சமையற்பாகம் கைவராததால் அரைகுறை வேக்காட்டில் இறக்கிய சோற்றையும், உப்புப்புளி சரிவரப் போடாத கறிகளையும் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்குப் பதஞ்சலியின் பாகற்காய் தேவாமிர்தமாக இருந்தது. அதை எப்படிச் சமைத்தாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், 'இந்தப் பாவக்காய்க் கறி சோக்காயிருக்குது! இதை என்னண்டு சமைக்கறது?" என்று சுந்தரம் கேட்டதும், பதஞ்சலியை முந்திக்கொண்ட கதிராமன், 'வாத்தியார்!... உந்தச் சமையல் வேலையெல்லாம் விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப்பிடுங்கோ!... இனிச் சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லு தாராளமாய் இருக்கும்!" என்று உரிமையோடு சொன்னதும், 'அதுதான் சரி! நான் கேக்கோணும் எண்டு நினைச்சனான்! இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும்?" என்று கதிராமனின் கருத்தை ஆமோதித்தாள் பதஞ்சலி. இதைக் கேட்ட சுந்தரத்தின் இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒருபுறம் வேளக்கு வேளை சுவையான வீட்டுச்சாப்பாடு, மறுபுறம் பதஞ்சலியை அடிக்கடி காணும் வாய்ப்பு என்று எண்ணி அவனுடைய மனம் குதூகலித்தது.

  அதன்பிறகு சுந்தரலிங்கம் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குக் கதிராமன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கினான். சுந்தரம் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவன். ஆண்மயில் பேடுகளைக் கண்டதும் தன் வண்ணத் தோகையை விரித்துத் தன் அழகையெல்லாம் காட்டுவதுபோன்று, சுந்தரமும் பதஞ்சலியின் அருகில் இருக்கையில் புதியதொரு மனிதனாகவே மாறிவிடுவான். சுந்தரலிங்கத்தினுடைய அந்தஸ்தும், நேர்த்தியான உடைகளும், சுவையான பேச்சும், கதிராமன் பதஞ்சலி இருவரின் மனங்களிலுமே அவனைப்பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தன. காட்டின் மத்தியிலே தனிமையில் வாழ்ந்த அவர்களுக்கு, சுந்தரத்தைப்பற்றி வேறு எந்த வகையிலும் எண்ணத் தோன்றவில்லை.

  எனவே சுந்தரம் தங்களுடைய குடிசைக்கு வரும் சமயங்களிலெல்லாம் பதஞ்சலி விழுந்து விழுந்து உபசரிப்பாள். விளாம்பழங்களை உடைத்துத் தேன்விட்டுக் கொடுப்பாள். அதை உருசித்தவாறே, அவன் பல்வேறு நாடுகளைப் பற்றியும் உருசிகரமாகக் கூறுவான். அவன் கூறுவதைக் கதிராமன் மிக அமைதியாக ஒரு மாணவனைப் போலிருந்து அக்கறையோடு கேட்பான். பதஞ்சலியோ கதைகளின் தன்மைக்கேற்ப வியப்பைக் காட்டுவதும், கலகலவெனச் சிரிப்பதுமாக இருப்பாள்.

  மலையர் வளவில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. மெசின் பழுது பார்ப்பதற்கும், சாராயத்துக்குமெனப் பணம் செலவழிந்து கொண்டேயிருந்தது. மணியம் உழவுயந்திரத்தை இயக்கப் பழகிக்கொண்டதன் பின், அவனுடைய குரு சச்சிதானந்தம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டான். ஆனால் மணியனோ தன் குருவை மிஞ்சும் அளவுக்கு இப்போ பல விஷயங்களிலும் முன்னேறியிருந்தான்.  இதன் காரணமாக, ஆங்காங்கு சில்லறையாகப் பெற்ற கடன்களை மலையர் தன் நெல் முழுவதையும் விற்றுக் கொடுத்தும் அவை தீரவில்லை. விரைவில் தான் கிராமசபை அங்கத்தவராகி, இதுவரை பட்ட கடன்களையெல்லாம் ஒரு கொந்துறாத்து வேலையிலேயே சம்பாதித்து, தீர்த்துவிடலாம் என்று மலையர் தீவிரமாக நம்பினார்.

 
32.

சுந்தரலிங்கம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கதிராமனிடம் கொடுக்க முயன்றபோது, கதிராமன் அதை பெற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டதால், சுந்தரலிங்கம் ஒவ்வொரு வார இறுதியிலும், தன்னுடைய வீட்டுக்குச் சென்று திரும்புகையில், சீனி, கோப்பிக் கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பான்.

  அன்றும், அவன் தன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது ஒரு பலாப்பழத்தையும் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்திருந்தான். தண்ணீருற்றுப் பலாப்பழங்கள் சுவைக்குப் பெயர்பெற்றவை. பலாப்பழத்தைக் கண்ட பதஞ்சலி, குதூகலத்துடன் ஓடோடிவந்து அதைப் பெற்றுக் கொண்டதுடன், உடனடியாக அதைப் பிளந்து கீலங்களாக வெட்டவும் ஆரம்பித்தாள்.

   குடிசையின் பக்கத்தேயிருந்த மாலுக்குள் உட்கார்ந்து, கதிராமனுக்கென வாங்கிவந்த பீடிக்கட்டு இரண்டையும் அவனிடம் கொடுக்கையில், பதஞ்சலி பலாப்பழப் கீற்றுக்களுடனும், தேங்காய் எண்ணெய்ப் போத்தலுடனும் உள்ளே வந்தாள். பலாப்பழக் கட்டிகளை அவர்கள்முன் வைத்துவிட்டுத் தன் கையில் தேங்காயெண்ணையை விட்டுக்கொண்டு, அதைக் கதிராமனுடைய உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பதஞ்சலி பூசினாள். அவள் கணவனுக்குச் செய்யும் பணியின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். கதிராமனுக்கு எண்ணெய் பூசி முடிந்ததும், சுந்தரத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட பதஞ்சலி, அவனுடைய கைகளைப் பிடித்து எண்ணெய் பூச ஆரம்பித்தாள். அவள் இவ்வாறு செய்வாளென்று சுந்தரலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. செம்பஞ்சு போன்ற அவளுடைய சிவந்த குளிர்மையான விரல்கள் தன்னுடைய உள்ளங்கைகளைத் தொட்டுத் தடவியபோது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவனுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முகம் குப்பென்று ஓடி வியர்த்தது. ஆனால் பதஞ்சலியின் உடலிலோ, உள்ளத்திலோ ஏதொரு பதட்டமும் இல்லை. ஒரு குழந்தையின் கள்ளங்கபடற்ற வெள்ளை மனதோடு, தன் சகோதரனின் கைகளில் சாதாரணமாகப் பூசி விடுவதுபோல் அவள் ஆறுதலாக எண்ணையைப் பூசிக்கோண்டே, 'நல்லாய் எண்ணை பூசோணும்! இல்லாட்டில் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக் கொள்ளும்!" என்று கூறிச் சிரித்துவிட்டுத் தன்னுடைய பங்கையெடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

  இந்த நிகழ்ச்சியினால் வெகுவாகப் பரபரப்படைந்திருந்த சுந்தரம், உள்ளத் தவிப்புடன் கதிராமனைக் கூர்ந்து கவனித்தான். அவனும் அவள் செய்கையை மிகவும் இயல்பானதொன்றாகக் கருதியவன்போல், பலாப்பழச் சுளைகளைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தான். பல நூல்களைப் படித்து, பண்பாடு, நாகரீகம் முதலியவற்றைத் தெரிந்;துகொண்ட சுந்தரத்தின் படபடப்பு அடங்க வெகுநேரமாயிற்று.

   அன்றிரவு கதிராமன் வீட்டில் உணவருந்திவிட்டுச் சென்ற சுந்தரத்திற்கு உறக்கம் வரவில்லை. வெளியே சென்று உலாவினால் நல்லதுபோற் தோன்றியது. பாடசாலை அறையைவிட்டு வெளியே வந்து, வாய்க்காலோரத்தில் விழுந்துகிடந்த ஒரு பட்ட மரத்தில் அமர்ந்து கொண்டான். வானவெளியெங்கும் ஒரே நட்சத்திரக் கூட்டமாக இருந்தது. அந்த விண்மீன்களில் பல மெல்லப் பறந்துவந்து அந்தக் காட்டுக் கிராமத்தின்மேல் இறங்கியதைப் போன்று, ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.

  சுந்தரம் தன் உள்ளங்கைகளை ஒருதடவை பார்த்துக் கொண்டான். உள்ளத்தைக் கிளறச் செய்யும் அந்த மென்மையும் கதகதப்பும் நிறைந்த ஸ்பரிசம் தன்மேல் படர்வது போன்றதொரு உணர்வு! அந்த உணர்வு அவனுடைய உணர்ச்சிகளையெல்லாம் அலைக்கழித்தது. மேலே சட்டை அணியாமல், பூரித்திருக்கும் இளமார்புக்கு மேலே குறுக்குக் கட்டாகச் சேலையை உடுத்திக்கொண்டு, பதஞ்சலி தன் கைகளைப் பிடித்து எண்ணெய் பூசிய அனுபவம் மீண்டும் அவன் நெஞ்சில் ஒரு நிகழ்ச்சியாகத் தெரிந்தது. பலாப்பழத்தின் இனிமை கலந்த நறுமணம் காற்றில் வந்து பரவுவது போன்றொரு பிரமை. இனிமேல் ஆயுட்காலம் முழுவதுமே எப்போதாவது பலாப்பழத்தை நுகரநேர்ந்தால் அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் தன் நெஞ்சில் இனிக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

  தூரத்தே இராக் குருவியின் குரல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது. விட்விட்டு இசைக்கும் அந்த ஓசை ஏறத்தாழக் குயிலினது போலவே இருந்தாலும், அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அந்த ஒற்றைக்குரல் எல்லையற்றதொரு சோகத்தைச் சுமந்துகொண்டு, மின்மினிகள் ஒளிசிந்தும் அந்த இரவிலே அலைகளாய்ப் பரவுவது போன்றிருந்தது. 'அந்த இராக்குருவியின் கீதம் ஏன் இவ்வளவு சோகம் ததும்புவதாய் இருக்கின்றது? அதன் துணைதான் எங்கே?"

  'எனக்கென்று ஒருத்தி இந்த உலகில் எங்கோ பிறந்திருப்பாள். அவளை ஒருநாள் நான் நிச்சயம் கண்டுகொள்வேன். கவிதைகளிலும், கதைகளிலும் சுவைத்த இன்பப் பொருளை, அவை எழுப்பிய நளினமான கனவுகளை, அவள் துணையுடன் நனவாக்கிச் சுவைக்க வேண்டும்.... அந்த வேளை எப்போது வரும்?" என ஏங்கியிருந்த சுந்தரம், இன்று பதஞ்சலியைக் கண்டபின், 'தனக்கென்றே பிறந்தவள் இன்று பிறனொருவன் மனைவியாய் இருக்கும் நிலையிலா தன் வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்?" என்று வெகுவாக வேதனைப்பட்டுக் கொண்டான். இராக் குருவியின் சோகீதம் கேட்கும் அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அவனுடைய கண்கள் கலங்கிக் கொண்டன.

  'என்னுடைய விதி!" என்று தன்னையே நொந்துகொண்ட சுந்தரத்திற்குத் தான் படித்த கதைகளிலும், பார்த்த சினிமாப் படங்களிலும், காதல் கைகூடாத காதலனோ காதலியோ, தாம் காதலித்தவர் வேறு ஒருவரை மணமுடிக்கும் சந்தர்ப்பத்தில், 'இனி அவள் என் தங்கை" என்றோ, அல்லது 'இனி அவர் எனக்கு அண்ணன்" என்றோ காதலைச் சகோதர பாசமாக்கிக் கொள்ளும் கட்டங்கள் நினைவுக்கு வந்தன. ஆம்! ஏன் அவ்வாறே நானும் அவளை என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படுத்திப் பழகக் கூடாது?.... எனக்குச் சகோதரிகள் எவரும் இல்லைத்தானே! பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நான் எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவிடை செய்வதுபோல் எனக்குச் செய்வதில்லையா? அவளால் அது முடியும்போது, கதிராமனால் அவள் அப்படிப் பழகுவதை இயல்பாக ஏற்க முடிந்தபோது, என்னாலும் அது நிச்சயமாக முடியும். ஆம்! பதஞ்சலி என் தங்கை! மீண்டும் மீண்டும் அந்தச் சொற்றொடரை வாய்விட்டுக் கூறிக்கொண்டு எழுந்த சுந்தரம், பாடசாலை அறைக்குட் கிடந்த தன் படுக்கையை நோக்கிச்சென்றான்.

  விளக்கை அணைத்துவிட்டுப் படுத்த அவனுக்கு உறக்கம் வரவேயில்லை. இருளில் விழிகளைத் திறந்து கொண்டிருந்தவனுக்கு மீண்டும் பலாப்பழத்தின் இனிய மணம் வீசுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்மையின் மென்மையும் கதகதப்பும் நிறைந்த பதஞ்சலியின் விரல்களின் ஸ்பரிசம் அவன் கைகளுக்குள் குறுகுறுப்பதைப் போன்றதொரு பிரமை! விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு, தன் கைகளை ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். 'பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை!" என்று உரத்த குரலில் கூறியும், அந்தச் சொற்றொடர் அவன் உள்ளத்திற்குள் புகுந்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.

 

  
 


 


     இதுவரை:  24715237 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4299 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com