அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி: அத்தியாயம் - 01
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி: அத்தியாயம் - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்.  
Monday, 14 February 2005

முல்லை கோணேஸ்கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது.

பதஞ்சலிக்கு முரலிப் பழத்தின் மணம் மிகவும் பிடிக்கும். 'ஐயோ, நிப்பாட்டுங்கோவன்..... உங்கை உந்த முரலியிலை பழம் இலுத்துப்போய்க் கிடக்குது!" வண்டியினுள் எழுந்து நின்றுகொண்டு அவள் ஆசையுடன் குதித்தாள். வண்டியின் பிற்பக்கத்தில் உட்கார்ந்திருந்த உமாபதி, 'அவசரப்படாதையம்மா! இன்னும் சரியான முரலிக் காட்டுக்குள்ளை நாங்கள் வரேல்லை!... ஒரு காக்கட்டை கழிஞ்சதும் பிறகு பாரன் முரலிப் பழத்தை!" என அவர் சொன்னபோது, பதஞ்சலி அதைக் கேட்டாற்தானே!

'அங்கை! அங்கை பாரணையப்பு மான் கிளையை!" அவள் சுட்டிக் காட்டிய திசையில் ஒரு கூட்டம் மான்கள் தாவிப் பாய்ந்தன. பதஞ்சலிக்கு ஓரே குதூகலம்! வண்டியின் கிறாதியைப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தாள்.

உறுதியான அந்த வண்டியை இழுத்துச் சென்ற எருதுகள் தலைகளை நிமிர்த்தியவாறே நடைபோட்டுக் கொண்டிருந்தன.

பலம் வாய்ந்த அந்த எருதுகளை இலாவகமாக நடத்திக் கொண்டிருந்தான் கதிராமன். பதஞ்சலியின் குதிப்பும், கும்மாளமும் அவன் முகத்தில் அடிக்கடி முறுவலை வரவழைத்தன. விழிகள்மட்டும் பாதையின் இருமருங்கும் அடர்ந்திருந்த இருண்ட காட்டைக் கவனித்துக் கொண்டிருந்தன. இளமைத் துடிப்புமிக்க அந்த விழிகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது.

பாதை வளைவில் வண்டி திரும்பியபோது பதஞ்சலி ஆச்சரியத்தினால் திகைத்துப் போனாள்! நெருக்கமாக வளர்ந்திருந்த முரலிமரங்கள் மழைநீரினாலும், கணக்கின்றிக் காணப்பட்ட பழங்களினாலும் சுமைதாங்க முடியாது வளைந்து நின்றன. குரங்குகள் வெருண்டு கிளைகளில் பாய்ந்தபோது பொலுபொலுவென முரலிப்பழங்கள் விழுந்து சிதறின!

வவுனியா மாவட்டக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் முரலிமரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் காய்த்துப் பழுக்கும்! முரலி பழுத்தால் காடே மணக்கும்! தின்னத் தின்னத் தெவிட்டாத பழம்! ஒருமுறை சுவைத்தாற் போதும், பின் நினைக்குந்தோறும் இனிக்கும்!

எருதுகளை அவிழ்த்துக் கட்டிய கதிராமன், கோடரியைத் தோளில் வைத்தவாறே அண்மையில் நின்ற முரலி மரங்களடியில் சென்று நிமிர்ந்து மேலே நோக்கினான். மேலே பார்த்தவன் ஒரு குறிப்பிட்ட மரத்தை நோக்கிச் சென்று அதன் கீழே கிடந்த பழமொன்றை எடுத்துக் கடித்தான். தரம் பிடித்திருக்கவே அந்தப் பழத்துக்குரிய முரலி மரத்தைத் தறிக்கத் தொடங்கினான்.

நெருநெருத்துக்கொண்டு மெல்லச் சாய்ந்த மரம் மளார் என்ற ஓலியுடன் நிலத்தில் விழுந்தது. பொன்னிறப்பழங்கள் நாலாபுறமும் சிதறின. பதஞ்சலி ஓடிவந்து ஆசையுடன் பழங்களைப் பிடுங்கிச் சுவைத்தாள். புத்தம்புதிய, தேன் நிறைந்த பழங்கள்!

உமாபதியார் பழங்களைப் பறித்துச் சாக்குகளில் நிறைக்கத் தொடங்கினார். கதிராமன் கோடரியைத் தோளில் வைத்தபடியே 'நீங்கள் இரண்டுபேரும் பழத்தைப் புடுங்குங்கோ, நான் போய் வேறை நல்ல பழம் கிடக்கோ எண்டு பாக்கிறன்!" என்று சொன்னபோது, 'அப்பு! அப்பு! நானும் போகப்போறன்!" என்று கெஞ்சினாள் பதஞ்சலி. அவள் தன் அழகிய முகத்தைச் சரித்து இவ்வாறு கெஞ்சும்போது உமாபதியாரால் எவ்வாறு மறுக்கமுடியும்? 'சரி பிள்ளை போ" என்று விடையளித்தார்.

பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்!

தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! கதிராமனுடைய நடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது. சிறு வயதுமுதல் பாலுந்தேனும், காட்டு இறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பினால் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த, நெடிய தோற்றம், கரியமேனி, சுருண்டகேசம் - இவையத்தனையும் ஒன்றாகத் திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின! காடு அவனுக்குச் சொந்தம். அவன் காட்டுக்கே சொந்தம். காடடோடு அவன் கொண்டிருந்த உறவு அவனுடைய தோற்றத்தில் நன்கு தெரிந்தது.

கதிராமன் முரலிப்பழத்தைத் தேடிக் காட்டினூடாகச் சென்றுகொண்டிருந்தான். பதஞ்சலி தரித்து நின்று, நிலத்தில் கிடந்த பழங்களைப் பொறுக்குவதும், பின் ஓடி நடப்பதுமாக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். முரலி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து, முகடுபோலக் கிளைகள் பின்னிக் கிடந்ததனால் காடு இருளடைந்துää ஒரே அமைதியாகவிருந்தது. அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு திடீரெனக் கிளம்பியது ஒரு பயங்கர உறுமல்!

பதஞ்சலி பயத்தினால் நடுநடுங்கிப் போனாள். கதிராமன் சட்டெனப் பதஞ்சலியைப் பிடித்;திழுத்து தனக்குப் பின்னே மறைத்தபடி சத்தம் வந்த திசையை நோக்கி, காட்டை உன்னிப்பாகக் கவனித்தான். அந்தப் பயங்கர ஒலியைத் தொடர்ந்து ஓர் அசாதரண அமைதி நிலவியது. காட்டுப் பறவைகளும், குரங்குகளும் திகில்கொண்டு அடங்கிப் போய்விட்டன!

மீண்டும் அவர்களுக்கு மிக அண்மையிலே ஓர் ஒற்றை உறுமல் கேட்டது. காடே கலங்கும் வண்ணம் பயங்கரமான குரலில் கர்ச்சித்தபடி, சிறு மரங்களை உலுப்பி அட்டகாசம் செய்தவாறு வெளிவந்தது ஒரு பெரிய கரடி!

பாதையருகே பழம் பிடுங்கிக்கொண்டிருந்த உமாபதியார் காட்டில் எழுந்த ஒலிகளைக் கேட்டதுமே பதஞ்சலியை நினைத்துப் பதைத்துப் போனார். அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 'ஆதி ஐயனே!" என வாய்விட்டு வேண்டியவாறே ஒடுங்கிப்போய் நின்றுவிட்டார்.

பதஞ்சலிக்கு நாவெல்லாம் வறண்டு உடல் நடுங்கியது. கதிராமனுடைய சாறத்தை இறுகப் பற்றியவாறே அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். கதிராமனோ சற்றும் பதட்டமின்றிக் கோடரியுடன் ஆயத்தமாக நின்றான். அவனுடைய முகத்தில் கலக்கத்தின் அறிகுறி இல்லை. ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு காட்டுவிலங்கு எவ்வாறு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றதோ அவ்வாறே அவனுடைய உடலிலும் ஒவ்வொரு தசையும் முறுக்கேறிச் செயலுக்குக் காத்து நின்றன.
(வளரும்)

(இவ்வத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியம் முல்லைக் கோணேஸ் அவர்களுடையது.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 24 Apr 2024 14:49
TamilNet
HASH(0x55c6cac7e090)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 24 Apr 2024 14:49


புதினம்
Wed, 24 Apr 2024 14:49
















     இதுவரை:  24800925 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4163 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com